வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ என்றும் ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?** முதலிய பாட்டுகள் அடுத்த நிலைக்கு எடுத்துக் காட்டாவன. இவற் றைக் கவிஞர் உணர்ச்சியோடு பலரிடையே பாட, அவர்கள் கேட்டு மகிழ்ந்தனர் எனலாம். இதம்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் பதம்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந்து இழிவுற் றாலும் விதம்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே* முதலான பாட்டுகள், கவிஞர் தனியே இருந்து எழுதித்தர, அதைப் பிறர் கற்று மகிழ்ந்தனர் எனலாம். இன்று இலக்கியமாக வாழும் பாட்டுகளில் பெரும்பாலானவை இவ்வகையைச் சார்ந்தவையே. எது பொருளாவது? பாட்டு, என்ன பொருள் பற்றிப் பாடுதற்கு உரியது? நெடுங்காலம் நிலைத்து நின்று கலை விருந்து நல்க வேண்டு மானால், புத்தம் புதிய பொருள்களைப் பற்றியோ, அரிய பெரிய பொருள்களைப் பற்றியோ பாடவேண்டும் அன்றோ? அதுதான் இல்லை. உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையில் உள்ள பழம் பொருள்களான வெண்ணிலவு, செங்கதிர், விண்மீன், கருமுகில், மலை, காடு, ஆறு, கடல், மான், முயல், கிளி, மயில், குழந்தை முதலியவைகள் பாட்டில் பாடுதற்கு அமைந்த பொருளாக உள்ளன. பழம் பாட்டுகளிலும் இவை பாடப்படுகின்றன. காதல் மிகப் பழையது; வீரமும் மிகப் பழமையானது; இன்பமும் துன்பமும் அப்படியே; வெற்றியும் சாவும் அப்படியே. இவை காட்டு மிராண்டிகளின் காலம் முதல் இருந்துவரும் மிகப் பழமையான உணர்ச்சிகள் ஆயின் இவைகளே புதுமையான _________________________________________________ ** பாரதியார் பாடல்கள், சுதந்திரப் பெருமை * பாரதியார் பாடல்கள், சுதந்திர தேவியின் துதி |