இந்த வேறுபாடு, நிழற் படத்திற்கும் கலைஞன் தீட்டிய ஓவியத்திற்கும் உள்ள அதே வேறுபாடு எனலாம். நிழற்படம் உயிரற்ற, உணர்ச்சி அற்ற கருவி. அதனால் பொருளின் எல்லாப் பகுதிகளும் அதில் அமைகின்றன. ஓவியமோ கலைஞனின் உணர்ச்சியுள்ள மனத்தின் படைப்பு ஆகும். அதனால் அந்த ஓவியத்தில் சிறப்பு உள்ளவை மட்டும் அமைகின்றன.* சிறப்பு அற்றவை சிறப்பு உள்ளவை என்று குறிக்கப்படு கின்றவை பொருளின் சிறப்பை மட்டும் ஒட்டியவை அல்ல. அந்தப பொருளைக் காண்பவரின் உணர்ச்சியையும் ஒட்டியவைகள் ஆகும். விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளுக்கு இடமான பகுதிகள் சிறப்புள்ள பகுதிகள்; மற்றவை சிறப்பு இல்லாப் பகுதிகள். ஒரு கலைஞனுடைய உணர்ச்சிக்கு விருந்தான ஒரு பகுதி, மற்றொரு கலைஞனுடைய உள்ளத்தைக் கவராததாக இருக்கலாம். இவ்வாறே ஒரு கலைஞன் புறக்கணித்த ஒன்று, மற்றொரு கலைஞன் போற்றுகின்ற பகுதியாக இருக்கலாம். ஆகவே கலைஞர் இருவர் ஒரே பொருளின் ஓவியம தீட்டினாலும் அந்த ஓவியம் இரண்டும் வேறுபடுகின்றன. ஆனால் நிழற்படக்கருவிகள் பல ஒரு பொருளைப் படம் எடுத்தால் அந்தப் பல படங்களும் ஒரு வகையாகவே அமைந்திருக்கும். கலைஞர் விரும்புகின்ற பகுதிதான் சிறப்பு உள்ளது என்பது கருத்து அன்று. விருப்பு வெறுப்பு இரண்டும் உணர்ச்சிகளே. கலைஞன் உள்ளம் விருப்புணர்ச்சிக்கு இடம் தரும் அளவிற்கு வெறுப்புணர்ச்சிக்கும் இடம் தருகின்றது. ஆகவே விருப்பமான பகுதி உள்ளத்தில் ஆழப்பதிவது போலவே வெறுப்பான பகுதியும் நன்கு பதிகின்றது. கலையைப் பொறுத்தவரையில் விருப்பு மிக்கதும் வெறுப்பு மிக்கதும் ஆகிய இரண்டும் சிறப்புள்ள பகுதிகளே. * Critics say that artist's difficulty lies in selecting the details proper to his purpose, and his justification rests on the selection he makes. He differs from the photographer in that he has more licence to eliminate when once the camera in set up, its owner's power over the landscape has come to an end. -Sir Arthur Quiller-Couch, Adventures in Criticism. |