மாலையில் இருள் பரவிய பின், வானத்தில் நிலவு மெல்லத் தோன்றும் காட்சி, பலரும் பலமுறை பல்வேறு நிலையில் கண்ட காட்சியே ஆகும். ஆயினும், அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன் அவ்வாறே வான்கண்டேன் திசைகள் கண்டேன் பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான் சிந்தாமல் சிதறாமல் அழகை எல்லாம் சேகரித்துக் குளிர்ஏற்றி ஒளியும் ஊட்டி இந்தோஎன் றே இயற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணம் தானோ 1 என்ற பாட்டைப் படிக்கும்போது, நாம் அரைகுறையாகக் கண்டு உணர்ந்து மறந்துபோகும் பேரழகைப் புலவரின் உள்ளம் நன்கு உணர்ந்து ஒழுங்குறக் காத்துப் பதியவைத்துள்ளது என்பதைத் தெளியலாம். எப்போது? புதுமையான, போற்றத் தக்க, அனுபவங்கள் புலவர் மனத்தில் எப்போது வந்து வாய்க்கும் என்பதைக் கூறல் இயலாது. எதிர்பார்த்தபோது அவை வராமல் ஏமாற்றம் தருவதும் உண்டு; நினையாதபோது எதிர்வந்து நின்று வியப்பூட்டுவதும் உண்டு. பல கடமைகளின் நெருக்கடிக்கு இடையே, பல தொல்லைகளுக்கு இடையே மனம் நைந்து இருக்கும்போது திடீரென்று புதிய அனுபவங்கள் உள்ளத்தே தோன்றி ஒளி வீசுதல் உண்டு. ஆயினும், அந்த அனுபவங்களைப் பெற்று மகிழ்ந்த கலைமனம், சுவை கண்ட பூனை போல், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட இடங்களையும் குறித்த நிலைகளையும் நாடுவது உண்டு. வோர்ட்ஸ்வொர்த் முதலான ஆங்கிலக் கவிஞர்கள் ஏரிகள் நிறைந்த ஒரு பகுதியைத் திரும்பத் திரும்ப நாடி அங்குக் கலைவாழ்க்கை வாழ்ந்த காரணம் அதுதான். அப்போது, மனம் வேறு எதிலும் ஈடுபடாமல் இருந்து இயற்கையின் அழகில் ஈடுபடல் முடிந்தது வோர்ட்ஸ்வொர்த் தம் கலையனுபவத்திற்கு இடையூறாக இருக்கலாகாது என்று ஒரு 1. பாரதிதாசன் கவிதைகள் |