நூறாண்டிற்கு மேற்பட்டவரும் ஒரோவொருவர் ஆங்காங்கிருப்பது உண்மையேனும், அது அருகிய வழக்காதலின் கணக்கிற் கொள்ளப்படுவ தன்று. ஆகவே, அறுபதாண்டு வாணரும் இக் காலத்து நீடுவாழியராம். |
அசுவத்தாமன், மாவலி (மகாபலி) முதலிய எழுவரும் என்றும் வாழியர் என்றும், மார்க்கண்டேயன் என்றும் பதினாறாட்டை யிளைஞன் என்றும், கூறுவதெல்லாம் பொருளொடு புணராப் புன்மொழியென விலக்குக. |
இனி, முதுபழங்கால மக்கள் பன்னூறாண்டு வாழ்ந்திருந்ததாக மறைநூல்கள் கூறுகின்றனவே யெனின், அதற்கேற்ப அஃறிணை யுயிரிகளின் வாழ்நாளும் நீண்டிருந்ததெனக் கூறி விடுக்க. |
2. வன்மை |
திமிங்கிலமும் யானையும் ஒட்டகமும் பருமைக்கும், அரிமாவும் வேங்கையும் காண்டாவும் வலிமைக்கும், சிறந்தவை. உடற்பருமை, உறுப்புரம் ஆகிய இரண்டினாலும் வன்மையுண்டாம். இவ் விரண்டுமற்ற பாம்பும் சுரமண்டலமும் போன்ற சிற்றுயிரிகள் நச்சுறுப்பினால் வன்மை பெற்றுள்ளன. "பாம்பைக் கண்டாற் படையும் நடுங்கும்", "சுரமண்டலம் கடித்தாற் பரமண்டலம்", "அரணை தீண்டினால் மரணம்" (உயிரி-பிராணி) |
இற்றை மாந்தன் துமுக்கி (துப்பாக்கி)யொடு வேட்டைக்குச் செல்லினும், குண்டு தப்பினாற் கொடுவிலங்கால் கொல்லப்படுவது திண்ணம். |
இனி, பருமையும் வலிமையும் பெற்ற இருதிணை யுயிரிகளையும் எளிதிற் கொல்லத்தக்க ஊனக் கண்ணிற்குத் தெரியாத, நுண்ணிய உலண்டுகளும் (germs) உள்ளன. |
3. அழகு |
இயங்குதிணை (சங்கமம்) உயிரிகளுள், சில பறவையினங்கள் அழகிற்குச் சிறந்தவை. மயிலும் கிளியும் அழகிற்கு எடுத்துக்காட்டாதலின், அவற்றின் பெயர்கள் அழகிய பெண்டிர்க்கு உவமையாகு பெயராக இலக்கியத்தில் வழங்கிவருகின்றன. பாலித் தீவிலுள்ள விண்ணகப் பறவைகள் (paradise birds) வண்ணத்தாலும் வண்ணிக்க முடியாத அழகு வாய்ந்தவை. |
நிலைத்திணை (தாவரம்) உயிரிகளுள்ளும் ஒரு சில மரஞ் செடி கொடிகளும் அவற்றின் உறுப்புகளும் கண்கவர் கவின் கொண்டவை. அதனாலேயே, ஆடை யணிகளையும் கட்டடங்களையும் தட்டுமுட்டு களையும் அணி செய்யும் ஓவியம், பெரும்பாலும் இலை வடிவாகவும் மலர் வடிவாகவும் இருக்கின்றது. "இலைமுகப் பைம் பூண்" என்றார் குமரகுருபரர். "பூவாராடை" என்றார் உலோச்சனார் (புறம். 274), "பூக்கனிந்து" என்றார் முடத்தாமக்கண்ணியார் (பொருந. 82). |