பக்கம் எண் :

மாந்தன் செருக்கடக்கம்129

     "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்"

(குறள். 969)

என்றார் திருவள்ளுவர்.
     காகம் ஓரிடத்து உணவைக் கண்டவுடன் தன் இனத்தை அழைத்து உடனுண்கின்றது.
     "காக்கை கரவா கரந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள"

(குறள். 572)

என்றார் திருவள்ளுவர்.    
     "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று."

(குறள். 108)

     "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்"

(குறள். 109)

என்னும் இரு குறள்கட்கும் இலக்காயது நாயினம் ஒன்றே.
     "யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்."

(நாலடியார், 213)

என்னும் உண்மை என்றும் எங்கும் காணலாம்.
     "கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்றவண் உண்ணா தாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்
திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலி"... ...

(190)

என்னும் புறப்பகுதி, புலி பசிப்பினும் இடப்பக்கம் விழுந்த விலங்கை உண்ணாக் கோட்பாடுடையது எனத் தெரிவிக்கும்.     
     "கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல்... ... ..."

(99)

என்னும் குறுந்தொகைச் செய்யுள், ஒரு மந்தியின் தலையாய காதலையும், அதன் குட்டியைப் பேணும் பொறுப்புணர்ச்சியையும், அக் குட்டியை ஏற்றுக் கொண்ட பிற குரங்குகளின் கூட்டுற வன்பையும், ஒருங்கே உணர்த்தும்.
     ஒழுங்கு, ஒற்றுமை, கூட்டுறவு என்பனவும் பண்பாட்டுள் அடங்கு மேனும், தொகுதிப் பண்பாதலின் முன்பு வேறாகக் கூறப்பெற்றன.