பக்கம் எண் :

தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்13

     உயரப் பறக்கும் பறவை உவணம் எனப்பட்டது.
"உயர வுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?" என்பது பழமொழி.
உவணம் - சுவணம் = கலுழன்
ஒ-நோ: உழல் - சுழல், உருள் - சுருள்
     சுவணத்தைச் சுபர்ண என்று திரித்து, சு+பர்ண என்று பிரித்து, நல்ல இலைபோன்ற சிறகுடையது என்று கரணியங் காட்டுவது, உத்திக்குப் பொருந்துமா என்று ஊன்றிநோக்குக.
முத்து:
     முத்து-முத்தம். முத்து சிறியது; முத்தம் பெரியது. 'அம்' ஒரு பெருமைப் பொருள் ஈறு (augmentative suffix) ஓ.நோ: நிலை-நிலையம், விளக்கு-விளக்கம், மதி-மதியம்(முழுநிலா). முட்டுப்போல் உருண் டிருப்பது முத்து. முட்டு = முட்டை. முத்து-முட்டு.
     உருண்டையாயுள்ள விதைகளும் முத்தெனப்படும்.
எ-கா: ஆமணக்கு முத்து, குருக்குமுத்து, வேப்பமுத்து.
இந்தியாவில் தொன்றுதொட்டு முத்திற்குச் சிறந்தது பாண்டிநாடு.
     "வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து"
என்றார் ஒளவையார். இடைக்கழகப் பாண்டியர் தலைநகராகிய கவாட புரத்தினின்று சென்ற முத்து, சாணக்கியர் பொருள்நூலிற் பாண்டிய கபாடம் எனப் பெயர்பெற்றது.    
     இங்ஙன மிருக்கவும், முத்தம் என்னும் சொல்லை முக்த என்று திரித்து, சிப்பியினின்று விடுதலை பெற்றது என்று பொருட் கரணியங் கூறின், அறிவுடைய தமிழன் எவன் நம்புவான்?
     இனி, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் முழுக்குவதுபோல், தமிழ் அல்லது தமிழம் என்னும் சொல்லையே, த்ரமிள-த்ரமிட-த்ரவிட எனத் திரித்து ஆரியச் சொல்லாக்க முயல்பவர் வேறு என்னதான் செய்யார்?
ஆங்கிலம் தமிழ்த் தூய்மை பேணலும் வடமொழி தமிழ் வழக்கு வீழ்த்தலும்:
     இந்தியா முழுவதையும் ஓராட்சிப்படுத்தற்கும், இந்தியர்க்கு அறிவியற் கல்வி புகட்டற்கும் ஆங்கிலர் ஆங்கிலத்தை ஆட்சிமொழி யாக்கினரேயன்றி, இந்திய மொழிகளைப் புறக்கணித்தற் கன்று. வேத ஆரியரோ, தம்மை நிலத்தேவர்(பூசுரர்) என்றும் தம் முன்னோர் மொழியைத்