பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த அரசர், குறுநில மன்னர் என்னும் சிற்றரசரும் பெருநில மன்னர் என்னும் பேரரசருமாக இரு திறத்தினர். சேர சோழ, பாண்டியர் மூவரும் பேரரசர்; பிறறெல்லாம் சிற்றரசர். பின்னவர் வேளிர் எனவும் பெயர் பெறுவர். | அரசன் என்னும் சொல் அரைசன், அரையன் என்றும் முறையே திரிந்து வழங்கும். அரையன் என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பெறும்போது, பேரரசன் மாவரையன் எனப்படுவான். மாவரையன் என்பது மாராயன் என மருவும், மாராயன் செய்யும் சிறப்பு மாராயம் எனப்பட்டது. | நச்சினார்க்கினியர், "ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம்" என்றுரைத்து மாராயம் என்பது என்னதென்று விளக்கினாரே யொழிய, மாராயம் என்னுஞ் சொல்லிற்குப் பொருள் கூறினா ரல்லர். அவர் ஒரு மொழி நூலதிகாரியுமல்லர்; அவர் காலத்தில் மொழியாராய்ச்சியும் இல்லை. ஆகவே, மாராயம் என்பது, மாராயனால் செய்யப்படும் சிறப்பென்றே பொருள்படுவதாகும். அச் சிறப்பு செல்வக்கொடை பட்டமளிப்பு என இரு வகைப்படும். பொதுவாக படைத் தலைவர்க்கு ஏனாதிப்பட்டமும், அமைச்சருக்குக் காவிதிப் பட்டமும், வணிகர்க்கு எட்டிப் பட்டமும் வழங்கப்பெறும். | ஏனாதி நல்லுதடன், ஏனாதி திருக்கிள்ளி, ஏனாதி நாயனார் (சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவர்) முதலிய பல ஏனாதிப் பட்டத்தினர் பெயர்கள் இலக்கியத்திற் காணப்படுகின்றன. காவிதி என்னும் சொல்லிற்குத் திவாகரத்தில் மந்திரி யென்னும் பொருளும், சூடாமணி நிகண்டில் கணக்கர் என்னும் பொருளும் கூறப்பட்டுள. எட்டி காவிதியர்க்குக் கொடுக்கப்படும் பொற்பூ, எட்டுப்பூ, காவிதப்பூ என்றும், நாடு அல்லது ஊர் எட்டிப் புரவு காவிதிப்புரவு என்றும், முறையே பெயர் பெறும் வணிக மாதர் இவ் விரு பட்டங்களையும் பெற்றதாகக் கூறும் "எட்டி காவிதிப் பட்டந் தாங்கிய மயிலியன் மாதர்" என்னும் பெருங் கதைக்கூற்று எத்தகைய தென்று திட்டமாய்த் தெரியவில்லை. ஒருகால் கணவர் பட்டங்களை அவர்களும் தாங்கிவந்தனர் போலும்! ஏனாதிக்குக் கொடுக்கப்படும் அடையாளம் மோதிரமாகும். அது ஏனாதி மோதிரம் எனப்படும். | வேந்தனாற் பெறும் பெருஞ்சிறப்பு மகிழ்ச்சிக்கும் பாராட்டிற்கும் உரிய நற்செய்தி யாதலால், மாராயம் என்னும் சொல்லிற்கு மகிழ்ச்சி, பாராட்டு நற்செய்தி முதலிய பொருள்களுந் தோன்றியுள்ளன. | | |
|
|