பக்கம் எண் :

தமிழ் தனித்தியங்குமா?17

     சொற்கள் தமிழில் வேண்டாது புகுத்தப்பட்டதன் விளைவாக அவற்றிற்கு நேரான விழுமிய தென் சொற்கள் சிறிதும் பெரிதும் முற்றும் வழக்கு வீழ்த்தப்பட்டுள்ளன.
     எ-கா :
வடசொல்                           தென்சொல்
அன்னம்                             எகின், ஓதிமம்
ஆன்மா                             ஆதன்,உறவி,புலம்பன்
ஆனந்தம்,குதூகலம்,சந்தோசம்           உவகை,களிப்பு,மகிழ்ச்சி
சகுனம்                              புள்
சத்தியம்,நிசம்,வாஸ்தவம்                உண்மை, வாய்மை,மெய்(ம்மை)
சீரணம்                              செரிமானம்
சுத்தம்                              துப்புரவு
தந்திரம்                             வலக்காரம்
திருப்தி                             பொந்திகை
பிதிரார்ச்சிதம்                        முதுசொம்
மேகம்                              முகில்,கார்,கொண்டல்
லாபம்                               ஊதியம்
நட்டம்                              இழப்பு
மைத்துனன்                          அளியன்
வருசம்                              ஆண்டு
ஸ்திரீ, புருஷர்                        ஆடவர், பெண்டிர்
     இங்குக் குறிக்கப்பட்ட வட சொற்கள் விளங்குதற் பொருட்டுப் பெரும்பாலும் தற்பவ வடிவிற் காட்டப்பட்டுள்ளன.
     நகைச்சுவையை ஹாஸ்ய ரசம் என்பதும், அவையைச் சதஸ் என்பதும், பணிவிடையைச் சிசுருஷை என்பதும், திருமணத்தைப் பரிணயம் என்பதும், குடமூக்கு (குடந்தை), குரங்காடுதுறை, சிற்றம்பலம் (தில்லை), பழமலை (முதுகுன்றம்), மயிலாடுதுறை, மறைக்காடு முதலிய செந்தமிழ் நாட்டூர்த் தனித் தமிழ்ப் பெயர்களை, முறையே, கும்பகோணம், கபிஸ்தலம், சிதம்பரம், விருத்தாசலம், மாயூரம், வேதாரணியம் என வட சொற்களாய் ஏற்கெனவே, மாற்றியிருப்பதும், இத்தகைய இழி செயலை இன்றும் கையாள்வதும், தென்னாட்டு வடமொழியாளரின் வரையிறந்த வடமொழி வெறியை யன்றி வேறெதைக் காட்டும்?
     இன்று தமிழில் வழங்கும் வட சொற்கள் தமிழிற்கு வேண்டியவு மல்ல; தமிழர் விரும்பியவு மல்ல. உடம்பிற்குட் புகுந்து அதனுக்கு ஊறுசெய்யும் நச்சுப் புழுக்களையும் இன்னாப் பொருள்களையும் அதன் நலத்தின் பொருட்டு நீக்குவது போன்றே, வேண்டா வடசொற்களையும் தமிழினின்று விலக்குதல் வேண்டும். இதனைத் தடுப்பவர் புறப் பகைவரும் உட் பகைவருமாயே யிருத்தல் வேண்டும்.
     வடசொற்கட்கு இங்குக் கூறியது பிற சொற்கட்கும் ஒக்கும்.