பக்கம் எண் :

52தமிழியற் கட்டுரைகள்

கஃறு
     கல் - கால் = கருமை.
     "கால்தோய் மேனிக் கண்டகர்" (கம்பரா. வானர. 21)
     கல் - கள் - காள் - காளம் = கருமை.
     கள் + து = கஃறு (கருமை)

     "கஃஃறென்னுங் கல்லதரத்தம்" (தொல். எழுத். 40, உரை)

     கஃசு, கஃடு, கஃது, கஃபு முதலிய பிற ஆய்தச் சொற்களின் வேர்ப்பொருள்கள் மறைந்துபோயிற்றென்க.
ஆய்த வரிவடிவு    
     ஆய்தவொலி, அடுப்பில் நெருப்பை அணைக்கும்போது உண்டாகும் ஓசையை ஒருபுடை ஒத்திருப்பதால், ஒருகால், அதன் வரிவடிவு அடுப்புக் கூட்டுப்போல் முப்புள்ளி வடிவாய் அமைக்கப்பட்டிருக்கலாம்.
முடிபு
     இதுகாறும் கூறியவற்றால். ஆய்தம் தமிழெழுத்தென்றும், அது லகர ளகர வகரத் திரிபான நுண் ககர மெய்யென்றும், ஒன்றாயிருத்தலும் உயிரேறாமையும்பற்றித் தனிநிலை யெனப்பட்டதென்றும், அறிந்து கொள்க. இனி ஆய்தவெழுத்தைத் தமிழெழுத்துகளின் முன்னும் பின்னும் இட்டு, ஜ, ஷ, F, Z முதலிய பிறமொழி யெழுத்துக்களை இக்காலத்துச் சிலர் குறிப்பது, தமிழியல்பிற்கு மாறானதும் தொல்லாசிரியர் கட்டளைக்கு முரணானதுமாகு மென்றும், பிறமொழிச் சொற்களையெல்லாம் "எழுத்தொடு புணர்ந்த" சொல்லாகவே திரித்தெழுதல் வேண்டுமென்றும், அல்லாக்கால் தமிழ் நாளடைவில் வேறு மொழியாக மாறிவிடுமென்றும், அறிந்து கடைப் பிடிக்க. மேலும், ஆய்தவொலிக்கு அயன் மொழி யொலிகளைக் குறிக்கும் ஆற்ற லில்லையென்றும், ஆய்த வரிவடிவெழுதுவதும் அயன் மொழி வரிவடி வெழுதுவதும் ஒன்றே யென்றும் எழுத்தென்பது உண்மையில் ஒலியே யன்றி வரிவடிவன் றென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க.

     - கழகத்தின் 1008-வது வெளியீட்டு விழா மலர்