பக்கம் எண் :

மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள்55

     இவை எங்ஙனமிருப்பினும், மூவிடப் பதிற்பெயர்களின் முதற்கால வடிவில், னகர மெய்யீறு ஒருமையும், மகர மெய்யீறு பன்மையும் உணர்த்துகின்றன என்பது தெளிவாம். இவ் ஈறுகள் எங்ஙனம் தோன்றியன என்பதை ஈண்டைக் கெடுத்துக் கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாம்.
     "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே." (தொல்-பெயரியல்.1)
என்பதால், இன்று வேர்ப் பொருளும் அடியும் தெரியாமல் உருமாறிக் கிடக்கும் விகுதிகளும் வேற்றுமை யுருபுகளுங்கூட, ஒரு காலத்தில் பொருளுணர்த்திய சொற்களாயிருந்தன என்பது பெறப்படும். அற்றேல் மூவிடப் பதிற்பெயர்களின் ஒருமை பன்மை யீறுகள் எச்சொற்களின் திரிபுகள் எனின், கூறுவல்:-
     அறிவு முதிராத முதுபழங்காலத்தில், பொருள்களின் ஒருமை பன்மை என்னும் எண் வேறுபாடுதான் உணரப்பட்டதேயன்றி, ஆண்மை, பெண்மை முதலிய பால் வேறுபாடு உணரப்படவில்லை. ஆதலால், ஒன்று என்னும் பொருள் கொண்ட ஒன் என்னும் சொல்லையும், கூடுதலைக் குறிக்கும் உம் என்னும் சொல்லையும், முறையே ஒருமையீறாகவும் பன்மை யீறாகவுங் கொண்டு, அவற்றை, ஏ, ஊ, ஆ என்னும் அடிகளோடு புணர்த்தித் தன்மை, முன்னிலை, படர்க்கைப் பதிற் பெயர்களை அமைத்தனர்.
     ஏ + ஒன் - ஏஒன் - ஏன்
     ஏ + உம் - ஏஉம் -ஏம்

     ஊ + ஒன் - ஊஒன் - ஊன்

     ஊ + உம் - ஊஉம் - ஊம்
     ஆ + ஒன் - ஆஒன் -ஆன்
     ஆ + உம் - ஆஉம் - ஆம்
     கோஒன் என்பது கோன் என்றும், ஆஉம் (ஆவும்) என்பது ஆம் என்றும், தொக்கு நிற்றல் காண்க.
  "ஓகார விறுதிக் கொன்னே சாரியை."

(தொல். எழுத். 180)

என்னும் தொல்காப்பிய நூற்பாவின் ஒன் என்பது சாரியை எனக் கூறப்பட்டது. இதற்கு, "கோஒனை, கோஒனொடு" என எடுத்துக்காட்டினார் நச்சினார்க்கினியர்.
     இவ் ஒன் என்னும் சொல்லுறுப்பை னகர வொற்றாகக் கொண்டு,
  "ஆமா கோனவ் வணையவும் பெறுமே."

(நன்.248)

என்றார் பவணந்தியார்.
     சொற்சாரியை புணர்ச்சியில் இரு சொற்கிடையே அல்லது இரு சொல்லுறுப்பிற்கிடையே வருமேயன்றி, தனிச்சொல்லின் ஈறாக வராது. அங்ஙனம் வருவதை ஈறென்று கொள்வதல்லது சாரியையென்று கொள்வது பொருந்தாது.