பக்கம் எண் :

பாயிரப் பெயர்கள்59

  "ஈவோன் தன்மை ஈத லியற்கை
கொள்வோன் தன்மை கோடன் மரபென
ஈரிரண் டென்ப பொதுவின் தொகையே."
என்னும் இதனான் அறிக என்பது நச்சினார்க்கினியம்.
     நன்னூலார் இவற்றோடு நூலையுங் காட்டி
  "நூலே, நுவல்வோன், நுவலுந் திறனே,
கொள்வோன், கோடற் கூற்றாம் ஐந்தும்
எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம்

(நன். 3)

என நூற்பா இயற்றினார். இதனால், கற்பிக்கப்படும் நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தின் இயல்பையும் விளக்குவது பொதுப்பாயிரம் என்றாயிற்று, இதன் ஐங்கூறும் எல்லா நூற்கும் பொதுவா யிருத்தலின் இனிச் சிறப்புப் பாயிர மாவது தன்னால் உரைக்கப்படும் நூற்கு இன்றியமையாதது. அது பதினொரு வகையாம்.
  ஆக்கியோன் பெயரே, வழியே, எல்லை,
நூற்பெயர், யாப்பே, நுதலிய பொருளே,
கேட்போர், பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.

(நன். 47)

  காலம், களனே, காரணம் என்றிம்
மூவகை யேற்றி மொழிநரும் உளரே.

(நன். 48)

     இப் பதினொன்றும் இப் பாயிரத்துள்ளே (பனம்பாரனார் தொல் காப்பியத்திற்குக் கூறிய சிறப்புப் பாயிரத்துள்ளே) பெறப்பட்டன." நூல் செய்தான் (சிறப்புப்) பாயிரஞ் செய்தானாயின் தன்னைப் புகழ்ந்தானாம்.

  "தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான் தற் புகழ்தல் தகுதி யன்றே"

(நன். 52)

     என்ப வாகலின் (சிறப்புப்) பாயிரஞ் செய்வார் தன் ஆசிரியரும் தன்னொடு ஒருங்கு கற்ற ஒரு சாலை மாணாக்கரும் தன் மாணாக்கரும் என இவர் என்பது தொல்காப்பியச் சிறப்புப் பாயிர நச்சினார்க்கினியர் உரைப்பகுதி. சிறப்புப் பாயிரம் என்பது, ஒரே நூற்குச் சிறப்பாயிருந்து, அதன் ஆசிரியன் பெயர், அந் நூல் வந்தவழி, அது வழங்கும் எல்லை, அந் நூற்பெயர் முதலிய பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குன்ற வேனுங் கூறி, அந் நூலைச் சிறப்பிப்பது. (foreword, opinion, editor's preface etc, மதிப்புரையெல்லாம் சிறப்புப் பாயிரமே.
     ஒரு நூலாசிரியன் தானே தன் நூலைப் புகழ்தல் தக்கதன் றாதலின், சிறப்புப் பாயிரஞ் செய்வார் பிறரா யிருத்தல் வேண்டுமென்பது தொன்று தொட்ட மரபு. அதனைச் செய்யத்தக்கார் மூவரென்று குறிப்பிட்டார் நச்சினார்க்கினியர். அவரொடு உரையாசிரியனையுஞ் சேர்த்து.