பக்கம் எண் :

சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்75

5. அரசர் முதலியவர் வழக்கங்கள்:
     வளமனைகளில் வாழ்தல், கொல்லாப்பண்டி, சிவிகை முதலியன வூர்தல், ஐம்புல வின்பமும் ஆசை தீர நுகர்தல் இவை முதலியன அரசர் வழக்கங்கள்.
     நறுஞ்சுண்ணம் பூசுதல், கிளி பூவை முதலியன வளர்த்தல், முல்லைக் கொடியை இல்லத்தில் வளர்த்து அதன் முதற்பூ மலர்ச்சியன்று விழவயர்தல் இவை முதலியன மகளிர் வழக்கங்கள்.
     ஆணுடை யணிந்து உவளகக் காவல் பூண்பது மறமகளிர் வழக்கம்.
புள்ளுங் குறியும் (நிமித்தம்) கண்டு போர்க்குப் புறப்படல், பூசையும் பலியுமிட்டுத் தேரைச் செலுத்துதல், பொற்றகடுவாயுளிட்டுப் போர் செய்தல் இவை முதலியன மறவர் வழக்கங்கள்.

     கார்த்திகை மாதக் கார்த்திகை நாளில் விளக்கேற்றி விழாவயர்தல், கணியம் பார்த்தல், பொன் தொட்டுச் சூளிடுதல், அரசரைத் தெய்வமாகக் கருதுதல், செல்வரையே மதித்தல், மாலையமைப்பு வாயிலாகக் காதலர் செய்தி யறிவித்துக்கொள்ளுதல் இவை முதலியன இருபான்மக்கள் வழக்கங்கள்.

     காந்தருவதத்தையா ரிலம்பகத்தில் கடல் வாணிகம் கூறப்பட்டுளது.
6. பிள்ளை வளர்ப்பு முறை:
     "காடி யாட்டித் தராய்ச்சாறுங் கன்னன் மணியு நறுநெய்யுங்
கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப்
பாடற் கினிய பகுவாயுங் கண்ணும் பெருக வுகிருறுத்தித்
தேடித் தீந்தேன் திப்பிலிதேய்த் தண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார்."

(2703)

என்னுஞ் செய்யுள் மிக இன்புறத்தக்கது.

7. வாழ்க்கை முறை:

     தேவர், துறவறமே சிறந்ததெனக்கொள்ளும் அருக மதத்தின ராயினும், உலகியலுண்மையையும் இல்லறத்தின் இன்றியமையாமையை யும் உணர்ந்தவராதலின், இருபாலாரும் மணவாமலே துறக்க இயலா விடத்து, முதற்கண் இல்வாழ்க்கையை நடாத்தி இல்லற இன்பத்தை இயன்ற அளவு நுகர்ந்த பின்னரே துறவை மேற்கொள்ள வேண்டும் என்னுங் கருத்தை, சீவகனும் அவன் தாயும் அவன் தேவிமாரும் வாழ்ந்த வாழ்க்கை முறையில் வைத்தும்; இம்மையில் துறவு கூடாவிடினும் உம்மையில் கவனித்துக் கொள்ளலாம் என்னுங் கருத்தைப் பிறர் வாழ்க்கைமுறையில் வைத்தும்; ஒரு கணவனுக்குப் பல மனைவியரிருப்பினும், ஒரு மனைவிக்குப் பல கணவரிருத்தல் உகந்ததன்றென்பதை,