பக்கம் எண் :

சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்77

     "தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை
மேவர் தென்தமிழ் மெய்ப்பொரு ளாதலின்
கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள்
'பூவர் சோலை புகுவல்,' என் றெண்ணினாள்."
(1328)
     "காதலாற் காம பூமிக் கதிரொளி யவரு மொத்தார்
மாதருங் களிற னானு மாசுண மகிழ்ச்சி மன்றல்
ஆதரம் பெருகு கின்ற வன்பினா லன்ன மொத்தும்
தீதிலார் திளைப்பி னாமான் செல்வமே பெரிது மொத்தார்."

(189)

     "மெய்வகை தெரிதல் ஞானம்; விளங்கிய பொருள்க டம்மைப்
பொய்வகை யின்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி
உய்வகை யுயிரைத் தேயா தொழுகுத லொழுக்கம்; மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும்,' என்றான்."
(1436)
     இது வீடு. முத்தியிலம்பகத்தில் வீடுபேற்றைப்பற்றி ஆருகத முறையில் மிக விரிவாகக் கூறுகின்றார் தேவர்.
     அறவழியிற் பொருளீட்டி அதனைக்கொண்டு அறவழியில் இன்பந் துய்க்கவேண்டு மென்னும் திருவள்ளுவத்தேவர் கொள்கையே, திருத்தக்க தேவர் கொள்கையுமாம். ஆயின், இல்லறத்தாலும் வீடுபேறுண் டென்பது பின்னவர்க்கு உடம்பாடன்று. அஃது அவர் மனப்பான்மையும் மதமும் பற்றியது.
     சிந்தாமணி, சிலப்பதிகாரம் போல உள்ளோன் தலைவனாக உள்ளதும் இல்லதும் புணர்க்காது, இல்லோன் தலைவனாக இல்லதும் உள்ளதும் புணர்த்தலின், அதன்கண் வரலாற்றுச் சான்றுகள் காணக்கூட வில்லை. ஆயினும், தேவர் காலத்துத் தமிழ்நாட்டு நாகரிகத்தை அறிவதற்குத் துணையான பல செய்திகள், நூல் நெடுமையுங் கூறப்பட்டுள.
(3) யாப்புத்திறம்:
     "வெஞ்சின வெகுளியிற் குஞ்சர முழங்கலின்
மஞ்சுதம் வயிறழிந் தஞ்சிநீ ருகுத்தவே."

(570)

     இது வஞ்சித்துறை. இதனைக் 'குறளடி நான்காய் வந்த கொச்சக வொருபோகு' என்பர் நச்சினார்க்கினியர்.
     "மடமா மயிலே குயிலே மழலை
நடைமா ணனமே நலமார் கிளியே
உடனா டுமெனை யனையென் றுருகாத்
தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே."

(1526)

இது கலி விருத்தம்.