சிந்தாமணியின் செவ்விய வனப்பியல் | 81 |
5. வடசொல்லென மயங்கும் தென்சொற்கள்: | கோட்டி = ஒருவரொடு கூட இருத்தல். கொள்ளுதல் = பொருந்துதல், கூடுதல். கொளுத்துதல் = பொருத்துதல், கொள் - கோள் = குலை (காயின் கூட்டம்), கோள் + தி = கோட்டி (கூட்டம், அவை). | 'இலக்கி' என்னுஞ்சொல் முன்னரே கூறப்பட்டது. இதுவே வடமொழியில் 'லேக்' என்றும், இந்தியில் 'லிக்' என்றும் திரியும். | 6. நூலளவை: | ஒரு துறையிற் பல நூல்களிருப்பினும், அவற்றுள் ஒன்றிரண்டே அளவை நூலாகும். திருக்குறட் கருத்துக ளனைத்தையுந் தழுவிச் சொல் மாற்றி ஒருவர் ஒரு புதுநூல் இயற்றிவிடின், அது முதலியன்மை பெற்று விடாது. தேவர் காலத்தில், பாவின யாப்பில் சிந்தாமணிக்கு அச்சுக்கட்டாக அல்லது வழிகாட்டியாக ஒரு வனப்பு நூலும் இருந்ததாகத் தெரியவில்லை. தொல்காப்பியர் கால வனப்புக்களெல்லாம் கடைக்கழகக் காலத்திலேயே இறந்துபட்டன. தேவார திருவாசகங்களோ, வழுத்து நூற்கள். திருக்கோவை தலைசிறந்த பாவின நூலாயினும், யாப்பினும் பொருளினும் ஒரு துறைப் பட்டது. ஆகவே, தேவர், தம் மதியைத் தொல்காப்பியத்தால் துலக்கித் திருக்குறளால் தீட்டிப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கால் பாரித்திருப்பினும், வனப்புக் கலையைப் பொறுத்தமட்டில், சிந்தாமணி யாப்பின் பெரும்பகுதி அவரது திறப்பாட்டின் விளைவே என்பது திண்ணம். கம்பராமாயணம் உட்பட்ட பிற்கால வனப்புக்கெல்லாம், சிந்தாமணி சிறந்த வழிகாட்டியா யிருந்ததென்பதை எவரும் மறுக்க முடியாது. | சிந்தாமணியைப் பின்பற்றிய பின்னருங்கூடக் கலைத்திறத்தில் வறுமைப்பட்டும், அணித்திறத்தில் அழகிழந்தும், தீர்ப்பியலில் நடுத் திறம்பியும் பிற்கால நூல்கள் பொலிவற்றிருப்பது, சிந்தாமணியை மேன் மேலுஞ் சிறப்பிக்கும். | சுதஞ்சணன் செய்தியும் கலுழவேகன் செய்தியும் தேவியற் பட்டவாயினும், மதத்துறை சார்ந்தவாதலானும், சிலப்பதிகார மணிமேகலை யினுள்ளும் அத்தகைய செய்தி காணப்படுதலானும், இல்லோன் தலைவனாகவுள்ள புனையியல் வனப்பிற்கு ஏதும் இழுக்கில்லை என்க. | - சிந்தாமணிச் சொற்பொழிவு நினைவு மலர் 1952 | | |
|
|