பக்கம் எண் :

82

ஆவுந் தமிழரும்

     எல்லா நாட்டிலும் எந்நிலை நாகரிகத்திலும் ஆவானது அருமை யாய்ப் போற்றப்படுவதே யாயினும் தமிழ்நாட்டில் அது தலைசிறப்பப் போற்றப்பட்டதென்பது எவரும் மறுக்கொணாதது.
     ஆரியப் பார்ப்பனர் ஆக்கொடையையே மிகுதியாய் விரும்பிப் பெற்றமையானும், ஆவோடு சேர்த்து வாழ்த்தப்படும் அந்தணரை ஆரியப் பார்ப்பனரென்று இடைக்காலத்திற் பிறழ வுணர்ந்தமையானும், ஆவுக்குக் தமிழரோடுள்ள தொடர்பினும் ஆரியரோடுள்ளது மிக்கதென்று தவறாகக் கருதப்படுகின்றது. வடமொழியாரியர் சிந்துவெளிக்கு வந்த புதிதில் முல்லை நாகரித்தையே அடைந்திருந்தமையால், அவருக்கு ஆத் துணை இன்றி யமையாததா யிருந்திருக்கலாம். ஆனால், இதனால் தமிழர்க்கு ஆத் தொடர்பு தொன்றுதொட்டதென்னும் உண்மை வலிமை குன்றாது.
     மக்கள் நாகரிகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நகரம் என நான்கு நிலைகளையுடையது. அவற்றுள் குறிஞ்சியிலேயே தமிழர்க்கு அல்லது தமிழரின் முன்னோர்க்கு ஆத் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும். ஏனெனின், ஆவானது முதன்முதல் குறிஞ்சி நிலத்திற்கே யுரிய விலங்காம். குறிஞ்சியையடுத்த முல்லை நிலத்திலிருந்த ஆயர் ஆட்டையும் மாட்டையும் பெருவாரியாய் வளர்த்து அவற்றின் ஊனையும் பாலையும் உண்டு வாழ்ந்தனர். அவர் ஆட்டினும் மாட்டையே சிறப்பாய் வளர்த்தனர். ஆவை மேய்ப்பவர் ஆயர் எனப் பெயர்பெற்றமை கவனிக்கத்தக்கது.
     ஆ என்னும் பெயர் தற்காலத்திற் பெண்பாலையே குறிப்பினும், முற்காலத்தில் இருபாற்கும் பொதுவாய் இருந்தது. இது னகரச் சாரியை பெற்று ஆன் என நிற்கும்.

"ஆவார் கொடியாய்"

(திருவிளை. நரிபரி. 19)

"பெற்றமும் எருமையும் மரையும் ஆவே"

 (தொல். 1560)

"ஆன்முகத்த னடற்கண் நாயகன்"

(கந்த. பானு. 95)

     ஆன் = எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண் (திவா.) ஆடு, மான், மரை, மிழா, கடமை, மாடு என்பவை முறையே ஒன்றினொன்று சிறிது வேறுபட்ட இனமாம். மா என்பது விலங்குப் பொதுப்பெயரையும் குதிரைப்