பக்கம் எண் :

உரையாசிரியர்கள்114

கனல் முன் இட்ட மெழுகுப் பாவைபோல மனம் உருகிப் பசந்து காட்டினாள்.”

                                           (இறையனார் கள. 2)
இளம்பூரணர்

    இளம்பூரணர் உரைநடை, எளிய சொல்லும் இனிய ஓசையும்
தெளிந்த கருத்தும் அமையப்பெற்று ஆழமான ஆறுபோல அமைதியாகச்
செல்லுகின்றது. இவரது உரை நடைக்குக் கீழுள்ள பகுதியை உதாரணமாகக்
காட்டலாம்:

     “இவ் அறுவகைப் பருவமும் அறுவகைப் பொழுதும் இவ் ஐந்திணைக்கு
உரியவாறு என்னை எனின், சிறப்புநோக்கி என்க. என்னை சிறந்தவாறு
எனின் - முல்லையாகிய நிலனும் வேனிற்காலத்து வெப்பம் உழந்து மரனும்
புதலும் கொடியும் கவினழிந்து கிடந்தன; புயல்கள் முழங்கக் கவின் பெறும்
ஆதலின், அதற்கு அது சிறந்ததாம். மாலைப்பொழுது இந்நிலத்திற்கு
இன்றியமையாத முல்லை மலரும்காலம் ஆதலானும், அந் நிலத்துக்
கருப்பொருளாகிய ஆனிரை வரும்காலம் ஆதலானும், ஆண்டுத் தனி
இருப்பார்க்கு இவை கண்டுழி வருத்தம் மிகுதலின் அதுவும் சிறந்தது
ஆயிற்று.”

சேனாவரையர்

    செறிவும் திட்பமும் வாய்ந்த சேனாவரையர் நடை, உற்று நோக்கிப்
பலமுறை பயின்று தெளிவும் வகையில் உள்ளது.

     ஒல்லேம் குவளைப் புலாஅல் மகன்மார்பிற்
     புல்லெருக்கங் கண்ணி நறிது.

என்புழி, குவளை புலால் நாறுதற்கும் எருக்கங்கண்ணி நறிதாதற்கும் காரணம்
கூறாமையின் வழுவாம் பிற எனின், புதல்வற் பயந்த பூங்குழல் மடந்தை
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவனோடு புலந்து உரைக்கின்றாளாகலின்
குவளை புலால் நாறுதற்கு அவன் தவற்றோடு கூடிய அவள் காதல் காரணம்
என்பதூஉம், எருக்கங்கண்ணி நறிதாதற்கு மகிழ்நன் செய்த துனிகூர் வெப்பம்
முகிழ் நகை முகத்தால் தணிக்கும் புதல்வன் மேல் ஒருகாலைக்கு ஒருகால்
பெருகும் அன்பு காரணம் என்பதூஉம் பெறப்படுதலின் வழுவாகாது என்பது.”
(சொல்-55)

பேராசிரியர் - 1

     பேராசிரியரது நடை இலக்கணமுடையது; தெளிவும் எளிமையும்
வாய்ந்தது. செப்பமும் எளிமையும் உடைய உரை