ஊடுருவிச் சென்று, பல வேறு புதிய கோணங்களில் நோக்கி, அவர்களின் தமிழ்ப்பணியைச் சிறந்த முறையில் மதிப்பிட்டுப் பயனுள்ள கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. கடந்தகாலக் கருத்துக்களை நெஞ்சில் நிறுத்தி, நிகழ்காலத்தில் வளர்ந்து வரும் புதிய சிந்தனையைத் தழுவி, எதிர்காலத்தை வரவேற்கக் காத்திருக்கும் நெடிய நோக்கு ஆராய்ச்சியாளர்களிடம் அமைந்துள்ளது. மாறி வருகின்ற சூழலை உணர்ந்து, வளர்ந்து வரும் புதுமையைப் போற்றி, தேவையற்ற கருத்தை விலக்கி இந்த இரண்டாம் பதிப்பு, செப்பம் செய்யப்பட்டுள்ளது. இன்று வரை வளர்ந்துள்ள ஆராய்ச்சியை வரையறுத்துக் கோடிட்டுக் காட்டி, இனி வளர வேண்டிய துறைகளுக்கு வழி வகுக்கும் முயற்சியின் பயனாய் இந்தப் பதிப்பு உருவாகியுள்ளது. இந்த நூல் வெளி மாநிலங்களில் வாழ்கின்ற தமிழறிஞர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. கடல் கடந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ்ச் சான்றோர்களின் கைக்குச் சென்று மகிழ்வூட்டியிருக்கிறது. தமிழறிந்த பிறமொழிப் புலமையாளர்களின் பார்வையில்பட்டுப் பாராட்டப் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள பல வேறு தமிழ் நிலையங்களுக்கு இந்த நூல் சென்றுள்ளது. தமிழ் பயிலும் மாணவர் முதல், கற்றுத் துறைபோகிய வித்தகர் வரை; ஆய்வுலகில் அடி எடுத்து வைக்கும் இளைஞர் முதல் ஆய்வுலகில் சாதனை பல புரிந்த மூதறிஞர்வரை; எழுதப் பயிலும் இளம் எழுத்தாளர் முதல் எழுத்துலக வேந்தர் வரை அனைவர் கருத்தையும் இந்த நூல் ஈர்த்துள்ளது. 1968ஆம் ஆண்டு, தமிழ் வளர்ச்சிக் கழகம் (தமிழக அரசு) இதனைச்சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்து ஈறாயிரம் ரூபா பரிசு நல்கி என்னை ஊக்குவித்தது. வணக்கத்திற்குரிய பெரியவர் மகாவித்துவான் மே. வீ.வேணுகோபாலப் பிள்ளை அவர்களும், தமிழ் மூதறிஞர் கி. வா. ஜகந்நாதன் அவர்களும், இலக்கிய வரலாற்றுக் கருவூலம் மு. அருணாசலம் அவர்களும் தாங்கள் படித்துப் பார்த்துத் திருத்திய பிரதியை மனமுவந்து எனக்குத் தந்து உதவினர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை வெளியிட்டு வருகின்ற தமிழாய்வில், ஆராய்ச்சி அறிஞர் மு. சண்முகம் பிள்ளை அவர்கள் திறனாய்வு நோக்கில் நூலில் செய்ய வேண்டிய மாறுதல்களை எடுத்துக்காட்டினார்கள். அறிஞர் பெருமக்கள் அனைவர்க்கும் நன்றி செலுத்துகின்றேன். |