மாற்றறும் தெய்வ மொழிக்குஇல்லை; பேர்க்குஎழு வாய்உருபும் தேற்றிய லிங்கம் ஒருமூன்றும் இல்லை செந்தமிழ்க்கே என்று இருமொழி இலக்கணங்களையும் வேறுபடுத்திக் கூறுகின்றார். (திங்ஙுப்படலம். 15) சிவஞானமுனிவர், வடமொழி தமிழ் இரண்டின் இயல்புகளையும் முழுமையாக ஒப்பிட்டு நோக்கி இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைப் பின்வருமாறு தொகுத்துரைக்கின்றார்: “தமிழ் மொழிப் புணர்ச்சிக்கண் படும் செய்கைகளும் குறியீடுகளும், வினைக் குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகு பாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியாற் பெறப்படா” இவ்வாறே உரையாசிரியர்கள், தொல்காப்பியர் கருத்துக்களைப் பிற்காலத்து இலக்கண நூற் கருத்துக்களோடு ஒப்பிட்டு மிக விரிவாக ஆராய்ந்துள்ளனர். உரைத் திறனாய்வு உரையாசிரியர்களின் திறனாய்வு முறைகள் இருவகையாய் அமைந்துள்ளன. 1. மூல நூலை ஆழ்ந்து கற்று, நூலாசிரியன் உள்ளக் கருத்தறிந்து நூலுக்குப் பொருள் கூறி விளக்குதல். 2. தமக்கு முன் இருந்த உரையாசிரியர்கள் எழுதிய உரைகளை மதிப்பிட்டுக் கூறுதல். இரண்டாம் வகைத் திறனாய்வு பற்றி ஆராய்ந்த வி. நா. மருதாசலக் கவுண்டர், ஒவ்வோர் உரையாசிரியரின் தனித் தன்மையைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: “உரையாசிரியர்களின் மதிப்பீட்டுமுறை பல திறப்பட்டன. பேராசிரியர் அழகொழுக மதிப்புரைப்பார். பரிமேலழகர் அமயம் நோக்கி நயந்தும் இகழ்ந்தும் கூறுவர். சேனாவரையர் பணிவும் தருக்க முறையும் காட்டுவர். “சிலர் உரையாசிரியர்களின் பெயர் கூறாது மதிப்பிட்டனர். சிவஞான முனிவர், நச்சினார்க்கினியர் முதலிய சிலர், பெயர் கூறாமல் உரையாசிரியர் கூற்றைச் சீர்தூக்கி உரைப்பது ‘பெருவழக்கு. |