உதவிசெய்து, தமிழ்ப் பண்பாட்டின் மலர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் நற்பணி ஆற்றியுள்ளனர். அவர்களின் உரைகள் யாவும், பழைய இலக்கியக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; இலக்கணப் புதையலைத் தோண்டி எடுத்துத் தருகின்ற கருவிகள்; சமயச் சிந்தனைக்கு ஒளியூட்டும் தூண்டுகோல்கள்; கருத்துச் சிகரங்களுக்கு நம்மை ஏற்றிவிடுகின்ற ஏணிப்படிகள்; கலைக்கோயில்களில் சுடரொளி பரப்புகின்ற நந்தா விளக்குகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவுகின்ற ஊர்திகள். இத்தகைய சிறப்புவாய்ந்த உரைகளைக்கொண்டு, தமிழரின் இலக்கியக் கொள்கையையும், திறனாய்வு முறைகளையும் உருவாக்கமுடியும். அவற்றிற்குத் தேவையான கருத்தும், கலைச் சொற்களும் உரைகளில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. உரைகளைப் பற்றிய ஆய்வு, உரைகளின் உள்ளடக்க விவரக் குறிப்புகளின் தொகுப்பாகவோ, பதிப்பு நூல்களின் பட்டியலாகவோ அமைவதால் பயனில்லை. உரையாசிரியர்களில் எவரையும் நாடுமொழி இனம் சமயம் காலம் ஆகியவற்றின் சார்புகளைக் கொண்டு மதிப்பிடக்கூடாது. அவர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து, அவர்களை வேறுபடுத்தி உரைத்திறனை மிகுதிப் படுத்தவோ, குறைக்கவோ கூடாது, அதே சமயத்தில் அவர்களிடம் காணப்படும் பிற்போக்கான கொள்கைகளை மறைக்கவோ, இருட்டில் தள்ளவோ கூடாது. நம்மால் விரும்பப்படுபவர் என்பதற்காகவோ, அனைவராலும் போற்றப்படுபவர் என்பதற்காகவோ அவர்களிடம் உள்ள தாழ்வான சிந்தனைகளை ஏற்கக்கூடாது. கால மாறுபாட்டிற்கும் பண்பாட்டின் முன்னேற்றத்திற்கும் பொருந்திவராத கருத்துகள் எவரிடம் காணப்படினும் புறக்கணிக்கத் தயங்கக்கூடாது. உரையாசிரியர்களுக்கும் உரைகளைக் கற்பவர்களுக்கும் நடுவே ஆய்வாளர் இருந்து கொண்டு, நந்தனாரின் சிதம்பர தரிசனத்திற்கு இடையூறாக நின்ற நந்தியைப்போல் மறைக்கக் கூடாது. உரைகளை முறைப்படி அறிமுகம் செய்து, உரைத்திறன்களை வெளிப்படுத்தி, ஆய்வுச் சிந்தனைகளை வாசகர்களின் உள்ளத்தில் விதைத்துவிட்டு ஆய்வாளர்கள் ஒதுங்கிவிட வேண்டும் உரை ஆய்வில், நமக்கு முன்னோடிகளாய் இருந்து, வழி காட்டியவர்களை, காலப்பாதையில் நமக்கு முன்னே சென்று புதிய சுவடுகளைப் பதித்தவர்களை மறக்கக் கூடாது. பழைய உரைகளைத் தேடிக் கண்டுபிடிக்கவும், அவற்றைப் படித்துப் |