அக்காலப் பெருநகரங்களில் நடந்த திருவிழாக்களை “மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி உத்தரமே, கருவூர் உள்ளி விழாவே என இவை போல்வன” என்ற பகுதி குறிப்பிடுகின்றது. இவ்வாறு இவ் உரையாசிரியர் வாழ்ந்த காலத்தின் அடிச்சுவடு இவர் இயற்றிய உரைநூலில் நன்கு பதிந்துள்ளது. உலக அறிவு இவ்வுரையாசிரியர் உலக அறிவு மிக்கவர் என்பதற்குச் சான்றுகள் பல தரலாம். பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்தகன்று உரைதல் அறத்தாறு அன்றே என்ற சூத்திரத்திற்குப் பின் வருமாறு விளக்கம் எழுதித் தம் உலக அறிவைப் புலப்படுத்துகின்றார்: “பூப்புப் புறப்பட்ட முந்நாளும் உள்ளிட்ட பன்னிரு நாளும் கூடி உறைய, படுங்குற்றம் என்னோ எனின்-பூப்புப் புறப்பட்ட ஞான்றுநின்ற கரு, வயிற்றிலே அழியும்; இரண்டாம் நாளின் நின்ற கரு, வயிற்றிலே சாம்; மூன்றாம் நாள் நிற்கும்கரு, குறுவாழ்க்கைத்தாம்; வாழினும் திரு இன்றாம்; அதனால் கூடப்படாது என்ப.” செல்வர் வாழ்ந்த பெரிய இல்லங்களின் பகுதிகளைப் பின்வருமாறு இவர் விளக்குகின்றார்: “அட்டில் (சமையல் அறை), கொட்ட காரம் (நெல் முதலிய பண்டம் வைக்கும் அறை), பண்டகசாலை (அணிகலன் முதலியவை வைக்கும் மனையகத்து உறுப்பு), கூட காரம் (மேன்மாடம்), பள்ளியம்பலம் (உறங்கும் இடம்), உரிமையிடம் (அந்தப் புரம்), கூத்தப் பள்ளி (நாடக அரங்கு) எனும் மனையகங்களும்; செய் குன்றும் இளமரக்காவும் பூம்பந்தரும் விளையாடும் இடமும் எனும் இல்வரையகங்களும்” (சூத். 21) வாய்மொழிக் கல்வி பாடம் சொல்லுகின்ற முறையில், மாணவர் எழுப்பும் வினாவும், அதற்கு ஆசிரியர் விடுக்கும் விடையுமாய்ப் பல பகுதிகள் உள்ளன. அவற்றுள் சில: “பாயிரம் என்ற சொற்குப் பொருள்யாதோ எனின், புறவுரை என்றவாறு. ஆயின் நூல் கேட்பான் புகுந்தோன் நூல் புறவுரை கேட்டு என்பயன் எனின், நூற்குப் புறனாக வைத்தும் நூற்கு இன்றியமையாதது. ஆதலின் என்க. என் போலவோ |