எனின், கருவமைந்த மாநகர்க்கு உருவமைந்த வாயில் மாடம் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும், தகை மாண்ட நெடுஞ்சுவர்க்கு வகைமாண்ட பாவை போலவும் என்பது. ஆதலின் பாயிரங் கேட்டே நூல் கேட்கப்படும்.” “புணராத முன்னும் புணர்ந்த பின்னும் ஒத்த அன்பினனாய் நின்ற தலைமகன் பிரியும் என்றுமோ பிரியான் என்றுமோ எனின், பிரியும் என்றுமே எனின், அன்பிலன் ஆயினானாம்; என்னை, பிரிவு அன்பிற்கு மறுதலையாகலான். இனிப் பிரியானே எனினும், அன்பிலன் ஆயினானாம். என்னை? பிரியாதிருப்ப இவ்வொழுகலாறு பிறர்க்குப் புலனாம்; ஆகவே அவள் இறந்து படும்: அவள் இறந்து பாட்டிற்குப் பரியான் ஆயினானாம், ஆகவே மூன்றாவது செய்யப்படுவது இல்லையாலோ எனின் பிரியும் என்பது. ஆயின், அன்பின்மை தங்காதோ எனின், தங்காது. பிரிவும் அன்பினானே நிகழுமாறு சொல்லுதும்.” இப் பகுதிகளை வினா விடை வடிவில் ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால், பாடம் சொன்ன பண்டைய முறையின் அமைப்பு வெளிப்படும். தூண்டுகோல் களவியலுரைப் பகுதிகளில் சில, ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாய் அமைகின்றன. கடைச்சங்கப் புலவர்கள் இயற்றிய நூல்களைப் பின்வருமாறு உரை கூறுகின்றது: “அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும் குறுந்தொகை நானூறும் நற்றிணை நானூறும் புறநானூறும் ஐங்குறு நூறும் பதிற்றுப் பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் என்று இத் தொடக்கத்தன.” இங்கே ‘பத்துப்பாட்டு’ இடம் பெறவில்லை! இவ்வுரை தோன்றிய காலத்தில் பத்துப்பாட்டு, தொகுக்கப் பெறவில்லை என்பதா? களவியலுரை, குறிஞ்சிப் பாட்டைப் பெருங் குறிஞ்சி என்ற பெயருடன் மேற்கோள் காட்டுகின்றது. ஆதலின், பத்துப்பாடல்களும் தனித்தனிப் பெயருடன் வழங்கி இருக்க வேண்டும். இவ்வுரை தோன்றிய காலத்திற்குப் பின்னர், பத்துப் பாடல்களும் |