பக்கம் எண் :

உரையாசிரியர்கள்172

தோன்றிய அகம், புறம், யாப்பு, அணி பற்றிய நூல்களும், ஆங்காங்கே
இவரது கருத்துகளை மேற்கொண்டுள்ளன.

     தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால்
இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின்
வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத்
தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.

     இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர்
சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார்.

     பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார்.
நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார்.
இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும்
சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை இயற்றினர். பழைய உரை ஒன்றும்
சொல்லதிகாரத்திற்கு உள்ளது. பழங்காலத்தில் தோன்றிய உரைகள்
இவைகளே ஆகும்.

     பழைய உரை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் இயல்பு உள்ளது.
இளம்பூரணர் உரை தமிழ் மரபை உணர்த்தும் உரை என்னலாம்.
சேனாவரையர் உரை வடமொழி இலக்கணக் கொள்கையைத் தமிழின்மீது
திணிக்கும் உரை என்பது பொருந்தும். பேராசிரியர் உரை இலக்கண இலக்கிய
ஆராய்ச்சி நிரம்பிய உரையாக உள்ளது. நச்சினார்க்கினியர் உரை இலக்கியச்
சுவை நுகர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. தெய்வச்சிலையார் உரையில் சில
இடங்களில் புதுமை ஒளி காணப்படுகின்றது. கல்லாடர் உரை முன்னைய
உரைகளைத் தழுவி எழுதப்பட்ட சார்பு உரையாக உள்ளது.

     பதினேழாம் நூற்றாண்டில் மீண்டும் தொல்காப்பிய ஆராய்ச்சி
தொடங்கியது. இதனைத் தொடங்கி வைத்தவர் சிவஞான முனிவர்.
தொல்காப்பியப் பாயிரம், முதற் சூத்திரம் ஆகிய இரண்டிற்கும் விருத்தியுரை
எழுதினார் இவர். இவ்விருத்தியுரை இலக்கண ஆராய்ச்சிக் கருவூலமாய்த்
திகழ்கின்றது. இவரை அடுத்துச் சோழவந்தான் அரசன் சண்முகனார்
தொல்காப்பியப் பாயிரத்திற்கும் முதற் சூத்திரத்திற்கும் விருத்தியுரை
எழுதினார். அரசன் சண்முகனார் எழுத்ததிகாரத்தில் நூன் மரபு, மொழி மரபு
என்ற இரு பகுதிகளுக்கும் உரை எழுதினார் என்றும், அவ்வுரைப் பகுதிகள்
கிடைக்கவில்லை என்றும் கூறுவர்.
1


 

 1. தொல்காப்பியச் செல்வம் (1965) பக்கம் 113.