ஏற்பட்ட அனுபவத்தையும் இவ்வாறு குறிப்பிடுகின்றார் என்று அறியலாம். உரையில் இடம்பெற்றுள்ள வேறு சில உதாரணங்களும் சோனவரையர், ஆசிரியர் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. நூல்: கற்கும் நூல் (234), சாத்தனது புத்தகம் (413), நூலின் இடையும் கடையும் தலையும் நின்ற மங்கலத்தை நூற்கண் மங்கலம் என்றும் (82) என்பவை போன்ற குறிப்புகள் நூலைப் பற்றியவை. பொருள் மயக்கமாகிய பிசிச் செய்யுட்கண் (விடுகதைப் பாடலில்) திணை முதலாயின திரிந்து வருவதற்கு, எழுதுவரிக் கோலத்தார் ஈவார்க் குரியார் தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார்-முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற் கமைந்தர் பெரிது என்ற வெண்பாவைக் காட்டி, “புத்தகம் என்னும் பொருள் மேல் திணைதிரிந்து வந்தவாறு கண்டு கொள்க” என்று கூறுகின்றார். சேனாவரையர் காலத்தில் பனையோலைகளில் வரிவரியாக எழுதி, மை பூசிக் கயிற்றால் கட்டிய ஏட்டுச் சுவடி இருந்தது. அதனை மேற்கூறிய விடுகதைப் பாடல் குறிப்பிடுகின்றது. கற்கும் முறை: கற்பார்க்குச் சிறந்தது செவி (75), உரைத்தென உணர்ந்தான் (228), சாத்தனது கற்றறிவு (80), கற்று வல்லன் ஆயினான் (230), நூலது குற்றங் கூறினான் (111) என்ற எடுத்துக் காட்டுகள் கற்குமுறையை உணர்த்துகின்றன. ஆசிரியரும் மாணாக்கரும்: திருவீர ஆசிரியன்; ஆசிரியன் பேரூர் கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் (41), மாணாக்கர்க்கு நூற்பொருள் உரைத்தான், மாணாக்கர்க்கு அறிவு கொடுத்தான் (75), ஆசிரியனோடு மாணாக்கர் வந்தார் (91) என்பவை ஆசிரியரையும் மாணாக்கரையும் பற்றியவை. தந்தையும் மகனும்: “சாத்தன் கைஎழுதுமாறு வல்லன்; அதனால் தந்தை உவக்கும் (38), ஓதல் வேண்டுமென்ற வழி, வேண்டும் என்பது ஓதற்கு வினை முதலாறிற்றாம். அவன் ஓதலை விரும்பும் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டுகொள்க” என்ற உதாரணங்கள், சேனவரையர் காலத்தில் தம் மக்களின் கல்வித்திறன் கண்டு, பெற்றோர் உவந்தனர் என்பதைக் காட்டுகின்றன. |