உரையின் இயல்பு சேனாவரையர் உரை, திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. சேனாவரையரின் புலமைப் பெருமிதமும் ஆராய்ச்சி வன்மையும் கருத்துத் தெளிவும் உரை முழுவதிலும் உள்ளன. கற்கண்டை வாயிலிட்டு மெல்ல மெல்லச் சுவைத்து இன்புறுவதுபோல், இவர் உரையை நாள்தோறும் பயின்று மெல்ல மெல்ல உணர்ந்து மகிழ வேண்டும். பலமுறை ஆழ்ந்து பயின்றாலும் இவ்வுரையை முற்றும் பயின்று விட்டோம் என்ற மனநிறைவு ஏற்படுவதில்லை. செங்குத்தான மலைமீது ஏற, கல்லும் முள்ளும், மேடும் பள்ளமும் நிறைந்த குறுகிய வழியில் வெயிலில் நடப்பது போன்ற உணர்ச்சியை, இவ்வுரையைக் கற்கத் தொடங்கும் மாணவர் முதலில் அடைவர்; முடிவில், மலையுச்சிக்குப் போய், மர நிழலில் நின்று, தண்ணென்ற காற்று வீச மெய் குளிர்ந்து, அங்கிருந்தபடியே மண்ணும் விண்ணும் வழங்கும் இன்பக் காட்சியைக் கண்டு மகிழும்போது பெறும் இன்ப உணர்வைப் பெறுவர். இவ்வுரை செறிவும், சுருங்கச் சொல்லி உய்த்துணர வைக்கும் இயல்பும் உடையது; ஆற்றல் வாய்ந்த சொற்களை ஆராய்ந்து எடுத்து, ஆழமான பொருளைத் திணித்து, ஆழ்ந்து பலமுறை கற்கும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது; தருக்கநூல் முறை வழுவாமல் தடை விடைகள் பல எழுப்பி, பிற உரையினை மறுத்தும் கருத்தை நிலைநாட்டுகின்றது. இவ்வுரையைக் கற்கும் போது, சிங்க நோக்காக நூலின் முன்னும் பின்னும் நோக்கி, அவற்றை நன்கு நினைவில் கொண்டு கற்க வேண்டிய பகுதிகள் பல இருப்பதை உணரலாம். தூய தமிழ்நடை, பீடு குன்றாமலும் பொருள் தெளிவுடனும் இனிய கருத்தோட்டத்துடனும் நூல் முழுவதும் அமைந்துள்ளது. இத்தனை சிறப்புகளும் வாய்ந்த சேனாவரையர் உரை, காலந்தோறும் புலவர் பெருமக்களின் போற்றுதலைப் பெற்று, காலவெள்ளத்தைக் கடந்து வருவதில் வியப்பில்லை. இவ்வுரையினை நன்கு பயிலாதவரை, தமிழ்ப் புலவர்கள், இலக்கணப் புலமை நிரம்பியவராகக் கருதுவதில்லை. முழுநோக்கு சேனாவரையர் சொல்லதிகாரம் ஒன்றிற்கே உரை கண்டிருப்பினும், தொல்காப்பியம் பற்றி முழுநோக்கு உடையவர். எழுத்தையும் பொருளையும் அவர் சிங்க நோக்காகக் கண்டு விளக்கம் எழுதுகின்றார். சொல்லதிகார அமைப்பையும் முழுமையாக நோக்கி, இயல் அடைவிலும், சூத்திரங்களின் அமைப்பு, பாடவேறுபாடு, ஓசை ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றார். |