சாத்தன் வந்தான்; அஃது அரசர்க்குத் துப்பாயிற்று (40), அரசனோடு இளையர் (வீரர்) வந்தார் (91), யானை தேர் குதிரை காலாள் எறிந்தான் (45, 291) யானும் என் எஃகமும் சாறும் (சால்தும்-போதும்) (43,209), கவசம் புக்கு மாக்கொணா என்ற வழி, குதிரை என்பது சார்பினால் விளங்கிற்று (53), இவர் யார் என்ற வழி, படைத்தலைவன் எனவும் செப்பிய வழி (68), வென்ற வேல் (234), கதி யாறும் உடைத்து இக்குதிரை (33) என்பவை அக்காலப்போர் முறையை உணர்த்துகின்றன. யானை யானையைப் பற்றிக் கணக்கற்ற உதாரணங்களைச் சேனாவரையத்தில் காணலாம். ‘பன்மை சுட்டிய’ (82) என்ற சூத்திரத்திற்குக் காட்டும் பல உதாரணங்கள் யானையைப் பற்றியவை. யானை பற்றி வரும் குறிப்புகளில் சில பின்வருமாறு: “யானைநூல் வல்லான் ஒருவன் காட்டுள் போவுழி ஓர் யானை அடிச்சுவடு கண்டு, ‘இஃது அரசு உவா ஆதற்கு ஏற்ற இலக்கணம் உடைத்து’ என்ற வழி” (37), “நம் அரசன் ஆயிரம் யானை உடையன்” (50), கோடு கூரிது களிறு (61), யானைக்கோடு கிடந்தது (67), யானையது கோட்டைக் குறைத்தான் (87), புலி கொல் யானைக்கோடு வந்தன (96). கலைகள் சேனாவரையர் காலத்தில், தமிழகத்தில் இசையும் கூத்தும் சிறப்புற்று விளங்கின. யாழ் (117, 173, 399), குழல் (117) முதலிய இசைக் கருவிகள் இருந்தன. ‘பாணியும் தாளமும் ஒரு பொருள் ஆயினும், இசை நூலார் தாளத்துடன் ஒரு சாரனவற்றிற்குப் பாணி என்னும் பெயர் கொடுத்தாற்போல்’-என்று சேனாவரையர் கூறும் உவமை அவர் காலத்து இசைக் கலையின் சிறப்பை உணர்த்துகின்றது. ஆடரங்கு (415), ஆடிய கூத்தன் (234) என்ற சொற்றொடர்கள் அக்காலத்தில், நாடகக்கலை சிறப்புடன் இருந்ததைப் புலப்படுத்துகின்றன. உழவும் தொழிலும் பின்வரும் உதாரணங்கள் உழவுத் தொழில் பற்றியவை: “எருப்பெய்து இளங்களை கட்டு, நீர்கால் யாத்தமையால் பைங்கூழ் நல்லவாயின (21); நம் எருது ஐந்தனுள் கெட்ட எருது |