தூண்டில் என்றதனை ஏனை உவமம் என்றார்’ என்று குறிப்பிடுகின்றார். அதிகார அமைப்பும் பெயரும் பேராசிரியர் தம் உரையில், தொல்காப்பிய அதிகாரங்களின் அமைப்பைப்பற்றியும், அவற்றின் பெயர்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். இவர் காலத்தில், பொருளதிகாரத்தில் எட்டாம் இயலாக உள்ள செய்யுளியலை ஒன்பதாம் இயலாகவும், மரபியலை எட்டாம் இயலாகவும் மாற்றி அமைத்தவர் இருந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றார். ‘இக் கருத்து அறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஓத்து என்ப’ என்று குறிப்பிடுகின்றார் (மரபியல்-93). அவ்வாறு மாற்றி அமைப்பது கூடாது என்பதற்குக் காரணமும் கூறுகின்றார். இன்றும் அவ்விரு இயல்களை முன்பின்னாக மாற்றி (மரபியலை எட்டாவதாகவும், செய்யுள் இயலை ஒன்பதாவதாகவும்) அமைத்து, ஆராய்ச்சிநூல் வெளியிட்டவர் உண்டு.* அதிகாரம் என்ற பெயரோடு, ஓத்து என்ற பெயரும் அதிகாரங்களுக்கு வழங்கியது என்பதற்குப் பேராசிரியர் உரையில் பின்வரும் சான்றுகள் உள்ளன: ‘சொல் ஓத்தினுள், இவ்வாய்பாடு விரிந்து வருமாறு கூறாது. (மரபியல்-18, செய்-1) ‘எழுத்து ஓத்தினுள் குறிலும் நெடிலும்’ (செய்-2) இவர் காலத்தில் அதிகாரங்களுக்குப் படலம் என்ற பெயரும் வழங்கிற்று. ‘தொல்காப்பியம் என்பது பிண்டம். அதனுள் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், என்பன படலம் எனப்படும்’ (செம்-172) என்று இவர் குறிப்பிடுகின்றார். பேராசிரியர் கருத்தை மேற்கொண்டு, இக் காலத்தும் அறிஞர்கள் சிலர், அதிகாரம் என்ற பெயரை நீக்கிவிட்டு, படலம் என்ற பெயரையே இட்டு வழங்கியுள்ளனர். உரைச் சிறப்பு பேராசிரியர், இளம்பூரணருடன் மாறுபட்டு உரை எழுதும் இடங்கள் சில உண்டு. பேராசிரியர் உரையால், மெய்ப் பாட்டியலும், உவம இயலும் பெரிதும் விளக்கமடைகின்றன. மெய்ப்பாட்டியலை மிகவும் விரிவாக ஆராய்ந்து பல நுட்பமான * தொல்காப்பிய ஆராய்ச்சி - டாக்டர் சி. இலக்குவனார். |