காட்ட வேண்டும். இலக்கியங்களில் உள்ள நுட்பங்களையும் நயங்களையும் எடுத்துக்காட்டும் உரையாசிரியர்களை மக்கள் பெரிதும் விரும்புவார்கள். தமிழ் இலக்கிய இலக்கணங்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் பலர். அவர்கள் புலமையிலும் விளக்கும் திறமையிலும் நடையிலும் வெவ்வேறு வகையானவர்களாக இருக்கிறார்கள். இலக்கண நூல்களுக்கும் சமய நூல்களுக்கும் உரை எழுதிய ஆசிரியர்களின் விளக்கங்களில் பொருள் தெளிவை எதிர்பார்க்கிறோம். இலக்கியங்களின் உரைகளிலோ பொருள் தெளிவோடு நயங்களையும் எதிர்பாக்கிறோம். தமிழ்நூல் உரையாசிரியர்களிடம் இந்த இருவகை ஆற்றல்களையும் பார்க்கிறோம். அன்பர் திரு. மு. வை. அரவிந்தன் இந்த நூலில் தமிழ் நூல் உரையாசிரியர்களைப் பற்றி ஆராய்ந்து விரிவாக எழுதியிருக்கிறார். கூடிய வரையில் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையில் வாழ்ந்த உரையாசிரியர்கள் அனைவரையும் பற்றி எழுதியிருப்பதோடு, இருபதாவது நூற்றாண்டில் உரை எழுதிய சிலரைப் பற்றியும் எழுதியிருக்கிறார். பல நூலின் உரைகளை ஆராய்ந்து பல ஆராய்ச்சியாளர்கள் உரைகளைப் பற்றி எழுதிய நூல்களையும் கட்டுரைகளையும் படித்து, இந்த விரிந்த நூலை எழுதியிருக்கிறார். இதை மேலெழுந்தவாரியாகப் பார்த்தாலே ஆசிரியருடைய உழைப்பின் பெருமை புலனாகும். இலக்கண நூல்களின் உரையாசிரியர்களையும் இலக்கிய நூல்களின் உரையாசிரியர்களையும் சமய நூல்களின் உரைகாரர்களையும் பற்றித் தனித்தனியே எழுதியிருக்கிறார். இப்போது கிடைக்கும் ஆதாரங்களை எல்லாம் தொகுத்து உரையாசிரியர்களின் வரலாற்றைத் தக்க மேற்கோள்களுடன் தந்திருக்கிறார். பிறகு உரைகளின் அமைப்பையும் நடையின் இயல்பையும் உரையில் காணும் சிறப்பான பகுதிகளையும் உரையால் உணரப்படும் காலநிலை, பழக்க வழக்கங்கள் முதலியவற்றையும் வகைப்படுத்திக் காட்டுகிறார். இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சிவஞான முனிவர் ஆகியவர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். சில உரையாசிரியர்களின் இயல்புகளை ஒப்பு நோக்கி, ஒற்றுமை வேற்றுமைகளைப் புலப்படுத்தி இருக்கிறார். உரையாசிரியர்களின் புலமைத் திறத்தையும் அவர்களால் உண்டான பயனையும் நன்கு தெரிவிக்கிறார். சிலருடைய உரைகளிற் சில பகுதிகள் ஏற்கத்தகாதன என்பதையும் சொல்லத் தவறவில்லை. அப்படி உள்ள சில இடங்களில் இவ்வாசிரியர் கூறும் கருத்துக்கள் எல்லாருக்கும் உடம்பாடாக இல்லாமல் இருக்கலாம். ஆயினும் |