நடுவு நிலைமை இவர் உரையில் நடுவுநிலைமை பிறழாத உள்ளம் வெளிப்படும் இடங்களும் சில உண்டு. “காலம் உலகம் என்பன வடசொல் அன்று. ஆசிரியர் (தொல்காப்பியர்) வடசொற்களை எடுத்தோதி இலக்கணம் கூறார் ஆதலின்” (சொல்-58) என்று எழுதுவது சேனாவரையர்க்கு மாறுபட்ட கருத்தாகும். எனினும் தம் உள்ளத்தில் தோன்றிய கருத்தினைக் கரவின்றி வெளியிடுகின்றார். களவியலில் (1), “கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என்றற்குத் துறையமை என்றார்” என்று நச்சினார்க்கினியர் கூறுகின்ற விளக்கம், தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கே புதியதொரு ஒளி தந்து ஆராய்ச்சியறிஞர்களை மகிழ்விக்கின்றது. தம் கருத்தே சாதித்தல் சிவஞானமுனிவர் தொல்காப்பியச் சூத்திர விருத்தியில், “நச்சினார்க்கினியர் முதலியோர் போல யாம் பிடித்ததே சாதிப்பேம் என்னும் செருக்கால் யாண்டும் மயங்காமையான்” என்று எழுதி நச்சினார்க்கினியர் பற்றித் தாம் கொண்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிவஞான முனிவர் கூறுவது போலவே, நச்சினார்க்கினியர் தாம் கொண்ட கருத்தையே வற்புறுத்திக்கூறும் இடங்கள் சில உண்டு. எழுத்ததிகாரத்தில், எழுத்துகள் மயங்கும் நிலை பற்றிக் கூறும்போது, தொல்காப்பியம் கூறும் விதி ஒரு மொழிக்கண் நிற்கும் எழுத்துநிலை பற்றியதாகும் என்று உரை கூறுகின்றார். அவ்விதி இருமொழி வந்து இணையும் இடத்திற்கும் பொருந்தும் என்று இளம்பூரணர் தெளிவுபடுத்தி இருந்தும், தம் கருத்தையே வற்புறுத்திக் கூறுகின்றார். ஆனால் தாம் கொண்ட கருத்திற்கு ஏற்ற உதாரணம் ஒரு சொல்லாக இல்லாமை கருதி, “அத்தகைய சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழங்கின; இன்று வழக்கு ஒழிந்தன” என மொழிகின்றார் (நூல் மரபு: 24,27,29). பிரயோக விவேக நூலாசிரியர் நச்சினார்க்கினியர் இவ்வாறு கூறியிருப்பது பொருந்தாது என்று பின்வருமாறு மறுத்துக் கூறுகின்றார்: “வடநூலார் சையோகம் ஒரு மொழியினும் புணர்மொழியினும் கொள்வர். அது பற்றிக் சூத்திரம் செய்தபடி இளம்பூரணரும் நன்னூலாரும் அவ்வாறு கொள்வர். அக் கருத்து |