பக்கம் எண் :

259ஆய்வு

அறியாத நச்சினார்க்கினியர் ஒரு மொழியிற்கொண்டு இரு மொழியிற்
கொள்ளாது உதாரணம் இறந்த என்பர்” (காரக-5).

     மொழிமரபில் (21,22,25) போலி எழுத்துகள் பற்றிய தொல்காப்பியச்
சூத்திரங்களுக்கு உரை எழுதியபின், ‘அது கொள்ளற்க’ என்று கூறுகின்றார்.
இதைப் பிரயோக விவேக நூலாசிரியர் பின் வருமாறு மறுக்கின்றார்.

     “நச்சினார்க்கினியர் எழுத்ததிகாரத்துள் போலி எழுத்துக் கொள்ளற்க
என்பர். கொள்ளா எழுத்திற்கு இலக்கணங்கூறின் அந்நூற்கு நின்று
பயனின்மை என்னும் குற்றம் தங்கும் என்க. நன்னூலாரும் போலியைத்
தள்ளாது எழுத்திலக்கணம் ‘பன்னிரு பாற்றதுவே’ என்றலின், போலி எதுகை
நிமித்தம் அங்கீகாரமாயிற்று. இளம்பூரணரும் போலி எழுத்தைக் கொள்ளற்க
என்று கூறாமை அவர் உரையிற் காண்க” (காரக-5).

     சங்ககாலத் தமிழ்மக்கள் நெல்லிலிருந்து கள் எடுத்து உண்டனர்
என்பதற்குச் சான்று பல உண்டு. (பெரும்.142, பட்-93, மலை-172).

     பெரும்பாணாற்றுப்படை (278-281),

      பூம்புற நல்லடை அளைஇ

      ....  ....  .....  ......  ......   ......

     வெந்நீர் அரியல் விரலலை நறும்பிழி

என்று கள் காய்ச்சிய முறை பற்றிக் குறிப்பிடுகின்றது. இவ்வரிக்கு உரை
எழுதியபின் நச்சினார்க்கினியர் ‘நெல்லடையும் பாடம்’ என்று கூறுகின்றார்.
நல்லடை என்ற பாடத்தை விட நெல்லடை என்று பாடமே சிறந்ததது.

     “சுடர்க்கடைப் பறவை பெயர்ப்படு வத்தம்’ என்பதற்குப் பொருந்தா
உரை எழுதுகின்றார். “இனி மின்மினி நெல்’ என்பாரும் உளர்” என்று
இவரால் புறக்கணிக்கப்பட்ட உரையே பொருத்தமான உரை என்பது
அறிஞர்களின் கருத்து.

     பட்டினப்பாலை,

      நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
     காலின் வந்த கருங்கறி மூடையும்                    (18-55)

என்று, காவிரிப்பூம்பட்டினத்திற்கு வந்தப் பொருள்களைக் குறிப்பிடுகின்றது.
இப்பகுதி, பழந்தமிழ் நாட்டுத் துறைமுகப் பட்டினத்திற்கு அரேபியா முதலிய
நாடுகளிலிருந்து கடல் வழியாக வந்த குதிரைகளையும், சேர நாட்டிலிருந்து
வண்டிகளில் மூலம் வந்த மிளகு மூட்டைகளையும் அறிவிப்பதாகக் கருதுவர்.
ஆனால் நச்சினார்க்கினியர், இவ்வரிகளுக்கு இவ்வாறு நேரே பொருள்
கொள்ளாமல் முன்னும் பின்னும் மாற்றி, தம் கருத்திற்கு