சிந்தாமணி உரை அரங்கேறியதைப் பற்றிப் புலவர் பெருமக்களிடையே ஒரு கதை வழங்கி வருகின்றது. சமணர்களின் காப்பியமாகிய சீவக சிந்தாமணிக்கு முதன் முறை உரை இயற்றி நச்சினார்க்கினியர் சமணப் பெரியவர்களிடம் சென்றபோது அவர்கள் அவ்வுரையினை வாங்கிப் படித்தப் பார்த்துச் சினமுற்று, “நச்சினார்க்கினியன் என்னும் கார் எருமை, சிந்தாமணி என்னும் தாமரைத் தடாகத்தினுள் புகுந்து குடைந்து, தாமரை மலர்களைக் கசக்கி எறிந்து பாழ்படுத்தி விட்டது!” என்றனராம். மறுமுறை வேறுரை திருத்தமாக எழுதிச் சென்று சமணச் சான்றோர்களிடம் காட்டியபோது பெரிதும் மகிழ்ந்து, “நச்சினார்க்கினியர் என்னும் வெள்ளையானை சிந்தாமணி என்னும் தாமரைப் பொய்கையினுள் நுழைந்து அழகிய மலர்களைத் தன் கையால் பறித்துத் தலைமீது வைத்துக் கரைக்கு இனிது வந்து சேர்ந்தது!” என்றனராம். நச்சினார்க்கினியர் இருமுறை உரை எழுதினார் என்ற கருத்தை டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் உடன்படுகின்றார். தமக்க இருவகையான உரை விளக்கங்கள் அமைந்த ஏட்டுப் பிரதிகள் கிடைத்தன என்று கூறி, உரை இரு வகையாக அமைந்திருப்பதற்குரிய காரணத்தைப் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார். “ஜைன அன்பர்களுடைய பழக்கத்தால் ஏட்டுப் பிரதிகள் இரண்டு வகையாக இருந்ததற்குக் காரணம் தெரிந்து கொண்டேன். நச்சினார்க்கினியர் முதலில் சிந்தாமணிக்கு ஓர் உரை எழுதினாராம். பிறகு அதை ஜைனர்களிடம் படித்துக் காட்டிய போது சம்பிரதாய விரோதமாகச் சில பகுதிகள் உள்ளன என்று சொன்னார்களாம். அதனால் அவர் தம்மை ஒரு ஜைனராகச் சொல்லிக் கொண்டு சிற்றாம்பூர் என்னும் இடத்திலுள்ள ஜைன மடத்திற்கு வந்து சில காலம் தங்கி ஜைன நூல்களையும் ஜைன சம்பிரதாயங்களையும் கற்றுச் சென்று மீட்டும் புதிய உரையை எழுதினாராம். விசேஷ உரையுடன் இருக்கும் பிரதியிலுள்ளது பின்பு எழுதிய உரை என்று தெரிய வந்தது” (என் சரித்திரம் (1950) | பக்கம் 741.) நச்சினார்க்கினியர் அரிதின் முயன்று எழுதிய சிந்தாமணி உரையைக் காலந்தோறும் அறிஞர்கள் போற்றி வருகின்றனர். ‘பவர்’ என்னும் ஆங்கிலப் பேராசிரியர், சிந்தாமணி உரைச் |