பக்கம் எண் :

267ஆய்வு

     தேவையற்ற இடங்களி்ல் எல்லாம் பொய்க் கதைகளைப் புனைந்து
கூறும் நச்சினார்க்கினியர், இவ்விரு கதைகளையும் சிறிது விளக்கிக் கூறி
இருக்கலாம். நாம் அவரிடமிருந்து இக் கதைக்கு விளக்கம் எதிர்பார்ப்பது
தவறாகாது. அவர் உரையைப் புரட்டிப் பார்த்து, இக் கதைக்கு அவர்
விளக்கம் எழுதாமை கண்டு நாம் ஏமாற்றம் அடைகின்றோம்.

     இவ்வாறே “வெள்ளிலை” என்று தொடங்கும் பாடலில்,

          கள்ளரால் புலியை ஏறு
             காணிய காவல் மன்னன்

என்ற வரிகளில் உள்ள கதையையும் இவர் விளக்கவில்லை. இதில்
கூறப்பட்டுள்ள கதையை அறிந்து கொள்ள முடியாமல் டாக்டர்
உ.வே.சாமிநாத ஐயர் பெரிதும் இடர்ப்பட்டார். ஒரு நாள் நண்பர்
ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் இக் கதைக்கு
நண்பர் வாயிலாக விளக்கம் கிடைத்தது. இக் கதையையும், கதை அறிந்த
வரலாற்றையும் அவர் ‘நினைவு மஞ்சரி’ (II, 1953-பக்கம் 106-113) என்னும்
உரைநடை நூலில் எழுதியுள்ளார். பின்னர் வெளியிட்ட சிந்தாமணிப்
பதிப்புகளில் இக் கதையை அடிக் குறிப்புகளில் சேர்ந்துள்ளார்.

     இத்தகைய கதைகள், நச்சினார்க்கினியர் காலத்தில் நாடறிந்த
பழங்கதைகளாக இருத்திருக்கலாம்; அதனால் அவற்றிக்கு விளக்கம்
தேவையில்லை என்று கருதி எழுதாமல் விட்டிருக்கலாம்.

     காப்பிய நோக்கு : நச்சினார்க்கினியர், சிந்தாமணியைக் காப்பியமாக
நோக்கி, உரைகண்டுள்ளார். காப்பியத்தைத் தொடர் நிலைச் செய்யுள் என்ற
பெயரால் வழங்கி, அதன் இயல்புகளை முதற்பாடலின் உரையிலேயே பின்வருமாறு விளக்கியுள்ளார்:

     “மெல்லென்ற சொல்லான் அறம் பொருள் இன்பம் வீடு
என்னும் விழுமிய பொருள் பயப்பப் பழையதொரு கதை மேல்
கொச்சகத்தால் கூறின், அது தோல் என்று (தொல்காப்பியர்)
கூறினமையின் இச் செய்யுள் அங்ஙனம் கூறிய தோலாம்
என்றுணர்க.”

காப்பியத்தின் கதைக்குரிய தலைவனை, “சீவகனை முற்கூறினார், கதைக்கு
நாயகன் ஆதலின்” (6) என்று நூலின் தொடக்கத்திலேயே
அறிமுகப்படுத்துகின்றார்.

     திருத்தக்க தேவர், சீவகனைத் தன்னேரில்லாத தலைவனாய்ப்
படைத்துள்ளார். அவன் இசைப் போட்டியில் காந்தருவதத்தையை
வெல்கின்றான். தன்னேரில்லாத தலைவனாகிய சீவகன் ஒரு பெண்ணை
வென்றான் என்று கூறுவதைத்