திருத்தக்க தேவர் விரும்பவில்லை. ஆதலின் அவர் சீவகனுக்குக் காந்தருவதத்தை தோற்றாள் என்று மிகவும் நயம்படக் கூறுகின்றார்; விஞ்சைக்கு இறைவன் மகள் விணையில் தோற்றவாறும் (11) தோற்றனள் மடந்தை நல்யாழ் தோன்றலுக்கு (702) மாதர் இசை தோற்று இருந்தனனே (735) என்று மூன்று இடங்களிலும் மறவாமல் தேவர் காந்தருவதத்தை தோற்றாள் என்றே கூறுகின்றார். ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்பதில் வல்லவராகிய நச்சினார்க்கினியர், “ஒரு மகளை வென்றான் என்றல் இவன் தலைமைக்கு இழிவு என்று அவள் செய்தியாகக் கூறினார்” (11) என்று கூறுகின்றார்: சீவகனைக் கருணை மறவனாகத் தம் காப்பியத்தில் காட்டுகின்றார் தேவர். சீவகன், வேடர்கள் கவர்ந்து சென்ற ஆனிரையை மீட்கப் போரிட்டு அவர்களைக் கொல்லாமல் அச்சுறுத்தியே நிரையை மீட்கின்றான். நூலாசிரியரின் உள்ளக் கருத்தை அறிந்து கொண்ட உரையாசிரியர் போரின் தொடக்கத்தைக் கூறும் பாட்டின் (448) உரையிலேயே, “தனக்கு அவர் நிகரன்மையானும், தனது அருளும் வீரமும் மேம்படுத்துதற்குச் சென்றான் ஆகலானும், அவரை அஞ்சப்பண்ணி நிரைமீட்டான் என்பதே தேவர் கருத்து; அது மேற்காணக” என்று கூறுகின்றார். மீண்டும் இக்கருத்தினைப் பல இடங்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம்: “மறவரைக் கொல்லாது உயிரை வழங்குதலின் வள்ளல் என்றார்” (11). “அவர் உயிரைக் கொடுத்தலின் வள்ளல் என்றார். பொராதே தேரொலியாலே அவரை அஞ்சுவித்து நிரை மீட்கின்றான்” (449). “கொல்லாதிருத்தலின் மாரிபோல் என்றார்” (452). “தம் உயிருக்கு ஊறு செய்யாது எய்தமை கண்டு போகடுதலின், தூவுதலான் அறுத்தான் என்றார்” (453). “தேவர், ஈண்டு வேடர் எம் முறையினும் கொல்லத்தகாதவர் ஆதலின், கொலை இன்று என்பது தோன்றக் களத்துப் பாவம் போக்கினான் என்று கூறாராயினர் என்க” (454). | சிந்தாமணிக் காப்பியத்தின் கட்டமைப்பு கதைநிகழ்ச்சி காப்பிய மாந்தர்களின் பண்பு வரலாறு ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கிய நச்சினார்க்கினியர் உரையில் தம் கருத்துகளை |