3. தொல்காப்பிய உரை இளம்பூரணருக்கு அடுத்தபடியாகத் தொல்காப்பியம் முழுவதற்கும் உரை செய்தவர் நச்சினார்க்கினியரே. பொருளதிகாரத்தில், மெய்ப்பாட்டியல் உவமவியல் மரபியல் ஆகிய மூன்று இயல்களைத்தவிர, மற்ற எல்லாப் பகுதிகளுக்கும் இவரது உரை உள்ளது. செய்யுளியலில் சில பகுதிக்கு உரை கிடைக்கவில்லை. இவரை, மறுவும் குறையும் இன்றி என்றும் கலையின் நிறைந்த கதிர்மதி என்றும், தொல்காப்பியம் என்னும் தொடுகடல் பரப்பை நிலையுடை கலத்தின் நெடுங்கரை கண்டவர் என்றும் சிறப்புப்பாயிரம் போற்றுகின்றது. தொல்காப் பியத்தில் தொகுத்த பொருள்அனைத்தும் எல்லார்க்கும் ஒப்ப இனிதுரைத்தான்-சொல்லார் மதுரைநச்சி னார்க்கினியன் மாமறையோன் கல்விக் கதிரின் சுடர்எறிப்பக் கண்டு என்று வேறொரு வெண்பா இவரைப் பாராட்டுகின்றது. இவருடைய உரையில், இனிய உவமையும், நயமான விளக்கமும், செவிக்கினிய சொல்லடுக்கும், இலக்கியச் சுவைமிக்க உதாரணப் பாடல்களும் இடம் பெற்றுக் கற்போரை மகிழ்விக்கின்றன. உரை சிறப்புப்பாயிரம், கல்லா மாந்தர் கற்பது வேண்டியும் நல்லறி வுடையோர் நயப்பது வேண்டியும் நச்சினார்க்கினியர் தொல்காப்பயித்திற்கு உரை இயற்றியதாகக் கூறுகின்றது. ஆம்; இவருடைய உரையை, கல்லா மாந்தர் கற்றுப் புலமைபெறலாம்; நல்லறிவுடையோர் நயந்து போற்றலாம். முதன்மை தரல் பழந்தமிழ் இலக்கியங்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றிற்குத் தொல்காப்பிமே இலக்கணம் என்பதை இவர் பல இடங்களில் வற்புறுத்தித் தொல்காப்பியத்திற்கு முதன்மை தருகின்றார். புறத்திணை இயலில், ‘கொடு்ப்போர் ஏத்தி, (35) என்னும் சூத்திரத்தின் உரையில் தத்தம் புதுநூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே |