தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டும் என்று உணர்க’ என உரைக்கின்றார். மதுரைக் காஞ்சி உரையில், ‘இப் பாட்டிற்கு மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சி என்று துறைப் பெயரான் அன்றி திணைப்பெயரால் பெயர் கூறினார். இத் திணைப்பெயர், பன்னிரு படலம் முதலிய நூல்காளற் கூறிய திணைப்பெயரன்று. தொல்காப்பியனார் கூறிய திணைப்பெயர்ப் பொருளே இப்பாட்டிற்குப் பொருளாகக் கோடலின்’ என்று கூறித் தொல்காப்பியத்திற்கு முதன்மை தருகின்றார். மலைபடுகடாம் பாடலில் ‘தீயின் அன்ன’ (145) என்னும் அடிக்கு உரை எழுதும்போது அதில் ஆனந்தக் குற்றம் உண்டு என்பார் கருத்தை மறுத்து, “தொல்காப்பியனாரும் இக் குற்றம் கூறாமையின் சான்றோர் செய்யுட்கு இக் குற்றம் உண்டாயினும் கொள்ளார் என மறுக்க” என்று கூறுகின்றார். முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு ஆகிய பாடல்களுக்குப் பொருள் எழுதும்போது பல இடங்களில் தொல்காப்பிய நூற்பாக்களை நினைவூட்டி எழுதுகின்றார். கலித்தொகைப் பாடல்களின் திணை, துறை, மெய்ப்பாடு ஆகியவற்றை விளக்கத் தொல்காப்பியத்தின் துணையையே நாடுகின்றார். சில சொற்களை விளக்கிப் பொருள் உரைக்கும்போதும், தொல்காப்பியத்தையே பயன்படுத்துகின்றார். நாண் (மதுரை-558, குறிஞ்சி-168) என்பதற்கு ‘உயிரினும் சிறந்த நாண்’ என்று பொருள் எழுதுகின்றார். ‘உயிரினும் சிறந்தன்று நாணே’ (பொருள்-113) என்பது தொல்காப்பியம். மதுரைக் காஞ்சியில் ‘வரைந்து நீ பெற்ற நல்லூழி’ (782) என்பதற்கு, “பால்வரை தெய்வத்தாலே வரையப்பட்டு நீ அறுதியாகப்பெற்ற நாள்” என்று எழுதுகின்றார். ‘பால்வரை தெய்வம்’ என்பது தொல்காப்பியத்தில் உள்ள தொடர் (சொல். கிளவி-58). இவை யாவும் நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்திற்கு முதன்மை தருபவர் என்பதற்கு உரிய சான்றுகளாகும். முழுநோக்கு தொல்காப்பியம், எழுத்து சொல் பொருள் என்னும் முப் பெரும்பகுதிகளை உடைய பெருநூல் என்பதையும், அதில் உள்ள ஒருபகுதியை-ஓர் இயலை-ஒரு நூற்பாவை ஆராயும்போது, முழுநூலையும் சிங்க நோக்காக முன்னும் பின்னும் நோக்குதல் |