அவற்றுள், அ இ உ எ ஒ என்னும் அப்பா லைந்தும் ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப என்று அமைப்பது இவர் கருத்து என்பது புலனாகிறது. இளம்பூரணர், ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் அப்பால் ஏழும் ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப (எழுத்-4) என்று அமைந்திருப்பதை நச்சினார்க்கினியர் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் அப்பா லேழும் ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப என்று மாற்றி அமைக்க வேண்டும் என்னும் கருத்துடையவர். ஆதலின், “ஆ ஈ ஊ, ஏ ஐ-என்பனவற்றைச் சொற்சீர் அடியாக்குக” என்று கூறுகின்றார். இளம்பூரணர் அகத்திணை இயலில் (6,7), காரும் மாலையும் முல்லை. குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர் என்று இறு நூற்பாக்களாகக் கொண்டவற்றை நச்சினார்க்கினியர், காரும் மாலையும் முல்லை குறிஞ்சி கூதிர் யாமம் என்மானர் புலவர் என்று ஒன்றாக்கியுள்ளார். இவ்வாறே எழுத்ததிகாரத்தில், எழுத்துகளின் பிறப்புக்குப் புறனடை கூறும் ‘எல்லா எழுத்தும்’ (எழுத்-102) என்னும் நூற்பாவை நச்சினார்க்கினியர் ஒன்றாக்கினார்; இளம்பூரணர் இரண்டாக்கினார். நச்சினார்க்கினியர் தம் உரையில், “இதனை இரண்டு சூத்திரமாக்கியும் உரைப்ப” என்று குறிப்பிடுகின்றார். இவற்றால், இவர் நூற்பா அமைப்பினை நன்கு ஆராய்ந்துள்ளார் என்பது விளங்கும். நல்ல பாடம் காணுதல்: சொல்லதிகாரத்தில் (24), ‘உருபென மொழியினும்’ என்பதில் உள்ள ‘உருபு’ என்பதற்கு ஈடாக ‘உருவு’ |