பக்கம் எண் :

உரையாசிரியர்கள்276

என்று வேறு பாடம் கொண்டு, அந்தப் பாடத்தின் பொருத்தத்தைப்
பின்வருமாறு ஆராய்கின்றார்:

     “உருபு எனப் பகர உகரமாகப் பாடம் ஓதில், அது வேற்றுமை
உருபிற்கும் உவம உருபிற்கும் பெயராய் வடிவை உணர்த்தாது என்று
உணர்க. அதுவென் உருபு கெட எனவும்; உருபினும் பொருளினும்
மெய்தடுமாறி எனவும்; உருபு தொடர்ந்து அடுக்கிய எனவும்; தொக வருதலும்
எனவும்; மெய்யுருபு தொகா எனவும்; யாதன் உருபின் எனவும் பிறாண்டும்,
வேற்றுமைக்கு உருபு என்றே சூத்திரம் செய்தவாறு காண்க. உவம உருபு
என்றல் அவ் ஓத்தினுள் கூறிய உரைகளான் உணர்க”

வினை முடிபு காட்டுதல்: கற்பியலில் (9), ‘பெறற்கரும் பெரும் பொருள்’
என்னும் நூற்பாவிற்கு உரை எழுதியபின்,

     “இச் சூத்திரத்துக் கண், ஏழன் உருபும் அவ்வுருபு தொக்கு
நின்று விரிந்தனவும்; செயின் என்னும் வினையெச்சமும் உரிய
என்னும் குறிப்புவினை கொண்டன. அவற்றை, இன்னவிடத்தும்
இன்னது செய்யினும் உரிய என்று ஏற்பித்து முடிக்க”

என்று முடித்துக் காட்டுகின்றார்.

வைப்புமுறை ஆய்தல்

    செய்யுளியலில் (190) ‘பாணன் கூத்தன் விறிலி’ என்னும் நூற்பா
விளக்கத்தில்,

     “இசைப் பின்னரது நாடகம் ஆதலின், பாணன் பின்
கூத்தனும்; பெண்பால் ஆதலின் விறல்பட ஆடும் விறலி
அவர் பின்னும்; அவ்வினத்துப் பரத்தை அவர் பின்னும்;
அகப் பொருட்குச் சிறவாமையின், அறம் பொருள் கூறும்
அறிவர் அவர் பின்னும்; ஏதிலாராகிய கண்டோர் அவர்
பின்னும் வைத்தார்.”

என்று உரைக்கின்றார்

கணக்கிட்டு மொழிதல்; இலக்கணத் கருத்துக்களைக் கணக்கிட்டு இத்தனை
என்று கூறுவது இவர்க்கு இயல்பு. எழுத்ததிகாரத்தில் (68), “மொழிக்கு
முதலாம் எழுத்து, தொண்ணூற்று நான்கு என்று உணர்க” என்றும்;
“மொழிக்கு ஈறாக உள்ள எழுத்து, நூற்று அறுபத்து ஒன்று” (எழுத்-77)
என்றும் கூறுகின்றார். தொகை மரபில் (13), ‘அஃறிணை விரவுப் பெயர்
இயல்பு மாருளவே’ என்னும் நூற்பா உரையில், “ஆண்டு, நாற்பத்து எட்டுச்
சூத்திரங்களான் முடிவதனை ஈண்டுத் தொகுத்தார்” என்று நூற்பாக்களை
எண்ணி உரைக்கின்றார்.