பக்கம் எண் :

உரையாசிரியர்கள்278

    கூத்தர் நாடக சாலையர் தொன்றுபட்ட நன்றும் தீதும் கற்றறிந்தவற்றை
அவைக்கண், எல்லாம் அறியக் காட்டுதற்கு உரியர் (கற்-17); எண்வகைச்
சுவையும் மனத்தின்கண்பட்ட குறிப்புகளும் புறத்துப் போந்து புலப்பட
ஆடுவார் (புறத்-90).

     இசை: சொல்; எழுத்தினான் ஆக்கப்பட்டுப் பொருளறிவுறுக்கும் ஓசை
ஆதலின் அதனை இசை என்றார். இஃது ஆகுபெயர்.

     கந்தழி-ஒரு பற்றுக்கோடு இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம்
கடந்த பொருள் (புறத்-33).

     கூற்று: வாழ் நாள் இடையறாது செல்லும் காலத்திணைப் பொருள்
வகையான் கூறுபடுத்தும் கடவுள் (புறத்-24).

எடுத்துக் காட்டுகள்

    நச்சினார்க்கினியர் பல இடங்களில் தமக்கு முன் இருந்த
உரையாசிரியர்கள் காட்டிய உதாரணங்களைப் பயன்படுத்தி இருப்பினும்,
சில உதாரணங்கள் இவரால் படைக்கப்பட்டவை; இவரது புலமைமாண்பை
வெளிப்படுத்துபவை; இவர் காலத்து நாகரிகத்தை நினைவூட்டுபவை.

     பாம்பினிற் கடிது தேள் (எழுத்-131) என்ற உதாரணம் நம் நெஞ்சத்தில்
நன்கு பதிகின்றது.

     பொன்னகல் நெய்யகல் (எழுத்-160) என்ற தொடர்கள் இவர் காலத்து
நாகரிகத்தை உணர்த்துகின்றன.

     அவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது (சொல்-257) என்ற
எடுத்துக்காட்டு, பண்பாட்டின் சிறப்பைக் காட்டுகின்றது.

    பாட்டும் கோட்டியும் அறியாப் பயமில் தேக்கு மரம் போல் நீடிய
ஒருவன் (சொல்-293) என்ற உதாரணம், கல்லாதவரிடத்து இவர்க்குள்ள
வெறுப்பைக் காட்டுகிறது.

     இவர் காலத் தமிழகம் (விசய நகரப் பேரரசுக்குட்பட்ட)
நாயக்கமன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இருப்பினும் தமிழ் மூவேந்தர்
மீது பற்றுடையவராய்ப் பின்வரும் உதாரணங்களைக் காட்டுகின்றர்:

     தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் (சொல்-33).

     வடுகரசரும் வந்தார்; இனித் தமிழ் நாட்டு
          மூவேந்தரும் வரினும்வருவர் (சொல்-285).

     அறுவகைத் தொகையும் ஒருங்கு வந்த தொடருக்கு உதாரணமாக,
‘துடியிடை நெடுங்கண் துணைமுலைப் பொற்றொடி’ என்பதைக் காட்டுகின்றார்
(சொல்-421).