பக்கம் எண் :

293ஆய்வு

எழுதுகின்றார். “மாட்டு இலக்கணத்தான் இப்பாட்டுகள் பத்தும் செய்தார்கள்
ஆதலின், இவ்வாறே மாட்டி முடித்தல் யாண்டும் வரும் என்று உணர்க’
என்று இவர் கூறி (முருகு-44) மாட்டு என்ற பெயரில் பாடல்களைச்
சிதைக்கின்றார்.

     இவ்வாறு, மாட்டு என்ற பெயரால் உரை கூறுவது பொருந்தாது
என்பதை முன்னரே கண்டோம்.

நயவுரை

    நச்சினார்க்கினியரின் கலைத்திறன் ழுமுவதையும் வெளிப்படுத்துதற்குரிய
சிறந்த இடமாகப் பத்துப்பாட்டு விளங்குகின்றது. நயமான உரைப்பகுதிகள்
சிலவற்றைக் காண்போம்:

    மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
    மெய்ப்பை புக்க வெருவரு தோற்றத்து
    வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
                                            -முல்லை 59-61

என்று யவனரின் தோற்றத்தை முல்லைப்பாட்டு புனைகின்றது. யவனர்
தோற்றம் நச்சினார்க்கினியர் உரையால் நன்கு விளங்கித் தோன்றுகிறது.

     ‘புரவியை அடிக்கின்ற சம்மட்டி மறையும்படி வடிம்பு தாழ்ந்து
பெருக்கும் செறிதலையுடைய புடைவை உடையினையும், சட்டை இட்ட
அச்சம் வரும் தோற்றரவினையும், இயல்பான வலி கூடின மெய்யினையும்
உடைய, தறுகண்மையினையுடைய சோனகர்’.

     சில சொற்றொடர்களுக்கு இவர்தரும் விளக்கம் மிகவும் நயமானது:

திருமுருகாற்றுப் படை

     4. மதன் உடை நோன் தாள் - அறியாமை உடைதற்குக் காரணமாகிய
வலியினையுடைய தாள்.

     7. கார்கோள்-கடல்; கார்முகப்படுதலின், கடல் கார்கோள் என்று பெயர்
பெற்றது.

     61. செவ்வேல் - எக்காலமும் போர் செய்தலின் செவ்வேல் என்றார்.

     102. வள்ளியோடு நகை அமர்ந்தன்று;

     காம நுகர்ச்சி இல்லாத இறைவன் இங்ஙனம் நகை அமர்ந்தான்,
உலகில் இல்வாழ்க்கை நடத்தற்கு என்று உணர்க.