பக்கம் எண் :

உரையாசிரியர்கள்294

பொருநராற்றுப்படை

     159. ஏடு இல் தாமரை: (பொற்றாமரை) ஒருவன் செய்ததன்றி, தமக்கென
இதழ் இல்லாத தாமரை.

     176. நில்லாத உலகம்-செல்வமும் யாக்கையும் முதலியன நிலை நில்லாத
உலகம்.

சிறுபாணாற்றுப்படை

     139. மடவோர்-வறுமை உறுதலும் இயல்பு என்று அறியாது
புறங்கூறுவோர்.

     140. அழி பசி-அறிவு முதலியன அழிதற்குக் காரணமான பசி.

பெரும்பாணாற்றுப்படை

     22. புலவுவாய்-கற்ற கல்வியை வெறுத்துக் கூறும் வாய்.

     418. அடங்காத் தானை-ஓர் எண்ணின்கண் அடங்காத பகைவர்.

     481. ஆன்று அடங்கு அறிஞர்-கல்விகள் எல்லாம் நிறைந்து
களிப்பின்றி அடங்கின அறிவினையுடையார்.

குறிஞ்சிப் பாட்டு

    225. வளைமையின் தன் தலை தீர்ந்தன்றும் இலனே-நற்குணங்களைத்
திரித்தற்கு உரிய செல்வச் செருக்கான், எந்நாளும் தன் குலத்திற்கு உரிய
நற்குணங்களின் நீங்கியதும் இலன்.

மலைபடுகடாம்

     40. பைதீர் பாணர்-பசுமையற்ற பாணர்; என்றது கல்வி முதிர்ந்தமையின்
இளமையற்ற பாணர் என்றவாறு.

     398. சுட்டினும் பனிக்கும் சுரம்-தத்தம் ஊர்களிலே இருந்து
நினைப்பினும் தலை நடுங்குவிக்கும் சுரம்.

     445. உண்ணுநர்த் தடுத்த இடிநுண் நுவணை-தன்னை நுகர்வாரை
வேறொன்றை நுகராமல் தடுத்த இடித்தலால் நுண்ணிதாகிய தினைப் பிண்டி.

சொல்லும் பொருளும்

    காடு கிழாள் என்பது, இக்காலத்து ‘காடு காள்’ என்று மருவிற்று
(முருகு.259).

     கல்லா இளையர்-தம் தொழிலை ஒழிய வேறு கல்லாத இளையர்
(சிறுபாண்-33).

     வாடுஊன்-உப்புக்கண்டம் (பெரும்பாண்-100).