கடுப்பு உடை பறவை-குளவி (பெரும்பாண்-229). பறி-மீன் வாரி எடுக்கும் பறி (பெரும்பாண்-265). நோக்கு-அழகு (மதுரைக்-13). விறலியர்-விறல்பட ஆடுதலை உடையார் (மதுரை-218) தட்டை-தட்டப்படுதலின் தட்டை என்றார் (மதுரை-305). தீம்புளி-கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி (மதுரைக்-318). கொழுமீன் குறைஇய துடிகண் துணியல்-கருவாடு (மதுரைக்-320). கவ்வை-எள்ளிளங்காய் (மதுரைக்-271). தொய்யில்-எழுதும் குழம்பு (மதுரை-416). நாளொடு பெயரிய விழுமரம்-உத்தரம் என்னும் நாளின் பெயர் பெற்ற உத்தரக் கற்கவி (நெடுநல்-82). ஒருத்தல்-யானைத் தலைவன் (மலைபடு-299). அரி-அரிசி (மலைபடு-416). முடுவல்-பெண் நாய் (மலைபடு-566). பனிக்கும் பாசறை-நோய் தீரும் மருந்துபோல் நின்றது (முல்லை-79). உவமை விளக்கம் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பல உவமைகள், நச்சினார்க்கினியர் விளக்கத்தால் நன்கு விளங்குகின்றன. இவர் உரைஇன்றேல், பல உவமைகள் விளங்காமல் போய் இருக்கும். திருமுருகாற்றுப் படையில் (1-3), உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி என்ற இனிய உவமை முருகனின் தோற்றத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இவ்வுமையின் சிறப்பை நச்சினார்க்கினியர் நன்கு விளக்குகின்றார்: ‘ஞாயிறு இருளைக் கெடுக்குமாறு போல, தன்னை மனத்தால் நோக்குவோர்க்கு மாயையைக் கெடுத்தலின் தொழில் உவமும்; தன்னைக்கட்புலனால் நோக்குவோர்க்குக் கடலின் பசுமையும் ஞாயிற்றின் செம்மையும்போல மயிலின் பசுமையும் திருமேனிச் செம்மையும் தோன்றலின் வண்ண உவமமும் |