கொள்ளக் கிடந்தமை காண்க” என்று தம் புலமை மாண்பு வெளிப் படும் வண்ணம் நயவுரை எழுதுகின்றார். பட்டினப்பாலையில், காவிரி கடலோடு கலப்பதை, மாமலை அணைந்த கொண்மூப் போலவும் தாய்முலை தழுவிய குழவி போலவும் தேறுநீர்ப் புணரியோடு யாறுதலை மணக்கும் (பட். 95-97) என்று சிறப்பிக்கின்றது. நச்சினார்க்கினியர், இவ்விரு உவமைகளைப் பின்வருமாறு விளக்குகின்றார்: ‘கரிய மலையைச் சார்ந்த செக்கர் மேகம் போலவும்-இது கரிய உயர்ந்த திரையின் மீதே சிவந்த ஆற்றுநீர் பரத்தற்கு உவமை. தாயுடைய முலையைத் தழுவிய பிள்ளையைப் போலவும்-இஃது ஒன்றுபடுதற்கு உவமை.’ மலைபடுகடாத்துள், காழ்மண்டு எஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென ஊழ்மலர் ஒழிமுகை உயர்முகம் தோயத் துறுகல் சுற்றிய சோலை வாழை (129-131) என்று அழகிய மலைக்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. நச்சினார்க்கினியர் உவமையின் பொருத்தத்தை, “வேல், யானையைக் குத்தினாற்போல வாழைப்பூ மலையைத் தீண்டி நின்றது என உணர்க; வாழைப்பூ உதிர்ந்து பின்பு உலராது நிற்றல் இயல்பு” என்று விளக்குகின்றார். நெடுநல்வாடையில், கத்தூரி முதலியவற்றை அரைக்கும் சாத்தம்மியினை நக்கீரர் கொள்உறழ் நறுங்கல் (50), என்ற உவமையுடன் குறிப்பிடுகின்றார். உவமையின் பொருத்தமும் சிறப்பும் நச்சினார்க்கினியரின் விளக்கத்தால் தெளிவு பெறுகின்றன. ‘கருங்கொள்ளின் நிறத்தை ஒத்த நறிய சாத்தம்மி’ என்பது நச்சினார்க்கினியரின் விளக்கமாகும். உவமையை விளக்க, இரண்டு பொருளும் மூன்று பொருளும் கூறிப் பொருத்திக் காட்டுவது இவரது இயல்பு. பட்டினப்பாலையில், மழைநீங்கிய மாவிசும்பின் மதிசேர்ந்த மகவெண்மீன் உருகெழுதிறல் உயர்கோட்டத்து முருகமர்பூ முரண்கிடக்கை வரியணிசுடர் வான்பொய்கை (34-38) |