தீம்புகை’ என்ற வெண்பாவை நுன்மரபிலும் (6) மேற்கோளாகத் தந்துள்ளனர். யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியரும், (எழுத்-4), பேராசிரியரும் (செய்-62) ‘தூஉஉத்தீம்புகை’ என்ற வெண்பாவைக் காட்டியுள்ளனர். எனவே, இவ் வெண்பாக்கள் பழமையானவை என்பதில் ஐயமில்லை. ஆனால். திருமுருகாற்றுப் படையின் கீழே உள்ள வெண்பாக்கள் பத்தும், பத்துப்பாட்டு ஏட்டுப் பிரதிகளில், காணப்படாமல் திருமுருகாற்றுப்படை மட்டும் இருந்த புதிய ஏட்டுப் பிரதிகளில் இருந்தன என்று டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் கூறுகின்றார். ஏழாம் வெண்பா, ‘ஒருகை முகன் தம்பியே’ என்று முருகனை விளிக்கின்றது. விநாயகர் தமிழகத்திற்கு வந்தது ஏழாம் நூற்றாண்டு ஆதலின் அவ்வெண்பாக்கள் தோன்றிய காலத்தை அறியலாம். பெரும்பான்மையான வெண்பாக்கள் பழமையானவையாக இருந்தும் அவற்றிற்கு நச்சினார்க்கினியர் உரை இல்லை. அவ்வெண்பாக்களை நச்சினார்க்கினியர் உரை எழுதி முடித்தபின் யாரேனும் சேர்த்தனரா? அல்லது அவை பத்துப்பாட்டு இயற்றிய பழம்புலவர்கள் இயற்றியவை அல்ல என்று கருதி நச்சினார்க்கினியரே உரை எழுதாமல் விட்டாரா? இவ்வினாக்களுக்கு விடை எளிதில் கிடைக்கவில்லை! 5. கலித்தொகை உரை கலித்தொகைஉரை, பல சிறப்பியல்புகளைக் கொண்டதாகும். ஆராய்ச்சிக்குத் திறவுகோலாய் உதவும் பல அரிய குறிப்புகளை அதில் காணலாம். கலிப்பாட்டு ஒவ்வொன்றிலும் நச்சினார்க்கினியரின் நுண்மாண் நுழைபுலம் வெளிப்பட்டு ஒளிர்கிறது. பாட்டில் அமைந்துள்ள உள்ளுறை உவமம், ஏனை உவமம், இறைச்சிப் பொருள் ஆகியவற்றைத் திணைக்கு ஏற்ப ஆராய்ந்து கூறுகின்றார்; பாட்டின் துறையை விளக்கிப் பொருள் எழுதுகின்றார்; வினைமுடிபுகளை முடித்துக் காட்டுகின்றார்; பாட்டில் அமைந்து கிடக்கும் மெய்ப்பாட்டை இனிது வெளிப்படுத்துகின்றார்; இவற்றோடு கலிப்பாட்டின் வகையைக் கூறுகின்றார். கலித்தொகை உரையின் சிறப்பியல்புகளை எல்லாம் நுணகி ஆராய்ந்து சிறப்பும் பாயிரம் கூறுகின்றது: |