நூல்கள் என்பது கருத்து” என்றும் பேராசிரியர் தொல்காப்பிய மரபியல் உரையில் புலப்படுத்துவதனை நோக்க இவ்வுண்மை புலனாகும். இவ்வுண்மைகளையெல்லாம் தெளிவாக உணர்ந்து, உணர்ந்து கொண்டவைகளை மனத்தில் நிறுத்தி நன்முறையில் ‘உரையாசிரியர்கள்’ என்ற இந்நூலினை ஆசிரியர் திரு. மு. வை. அரவிந்தன், உருவாக்கியிருக்கின்றார். முறைப்பட எண்ணி வகுத்து முடிவிலே சூழ்ந்த ஆசிரியரின் திறம் போற்றத்தக்கது. இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் தொடங்கி இற்றைநாள் உரையாசிரியர் வரையில் உரையாசிரியர்கள் பலரையும் குறிப்பிட்டு, அவர்தம் உரையின் நலங்களையும் ஒரோவழி அவர் உரையின் புன்மையினையும் எடுத்துக்காட்டித் தமிழிற்கு ஆக்கமானதொரு நூலினை ஆக்கித் தமிழுலகிற்கு ஆசிரியர் அளித்துள்ளார். ‘உரையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என நூலினைத் தொடங்குகின்றார் ஆசிரியர். நூல் அரங்கேற்றத்தினை நுவன்று, உரையில்லாத காலத்தினை உணர்த்தி, செவிச் செல்வத்தின் சிறப்பினைப் புலப்படுத்தி, வாய்மொழியின் செல்வாக்கினை வகையுற மொழிந்து, உரையின் வளர்ச்சியினை விரித்துக்காட்டி, வலிமையுள்ளவை வாழ்வு பெறுகின்றன என எடுத்துக்காட்டும் ஆசிரியர் கைவண்ணம் நூலின் தொடக்கத்திலேயே அமைந்து காணப்படுகின்றது. பின்னர், செய்யுள் வடிவில் தோன்றிய சில உரை நூல்களையும், நூலாசிரியரே எழுதிய உரைநூல்களையும், உரைக்கு உரையாக எழுந்த நூல்களையும், உரை எழுதாக் கொள்கையின் உண்மையினையும் ஆசிரியர் நன்குணர்த்தி, இத்துறையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தம் உள்ளக்கிடக்கையினையும் தெள்ளிதின் கிளத்துகின்றார். “இருட்டறையில் உள்ள எழில் மிக்க ஓவியத்தைக் காணக் கண்கள் மட்டும் இருந்தால் பயனில்லை. இருளைப் போக்கும் ஒளி வேண்டும். பழம் பொருட்காட்சிக் சாலையில் உள்ள பல வகையான கலைச்செல்வங்களைக் கண்டுகளிக்க அவற்றைப் பற்றிய விளக்கவுரை வேண்டும். இனிய பலாப்பழத்தைச் சுவைத்து மகிழ, அதனை முறையாக அறுத்துச் சுளை எடுத்துத் தருபவரின் உதவி வேண்டும். இவ்வாறே பழம்பெரும் இலக்கண இலக்கியச் செல்வங்களைச் கற்று மகிழ்வதற்குத் தக்க உரையாசிரியர்கள் வேண்டும். காட்டு வித்தால் அன்றி அவற்றைக் |