பக்கம் எண் :

உரையாசிரியர்கள்310

     இவர் காலத்தில் குமரக் கோட்டம், பிரமக் கோட்டம் ஆகிய
கோயில்கள் இருந்தன. ஆசீவகப்பள்ளியும், நிக்கந்தக் கோட்டமும் இருந்தன.
(எழுத். 153), நூற்றுக்கால் மண்டபம் இருந்தது (எழுத். 472). சிவன்
கோயில்களில் இருந்த தெய்வங்களை இவர்காலத்து மக்கள் நாயன்மார் என்று
வழங்கினர் (மதுரைக்-445). கோயில்களிலும் செல்வர் மனைகளிலும் பொன்
அகலும் நெய்யகலும் சுடர்விட்டன (எழுத். 160). கார்த்திகைத் திங்களில்
கார்த்திகை நாளில் விளக்குகள் ஏற்றப்பட்டன. (புறத்-35). மக்கள்
அமாவசையன்று உண்ணாநோன்பு இருந்தனர் (எழுத்.-223).

     பிணத்தைக் குடங்களில் இட்டுப் புதைத்தனர் (எழுத்-354).

     தமிழ் நூல், தமிழ் யாழ் (எழுத்.-128), தமிழ்க் கூத்து (385), இராஅக்
கூத்து (227) என்ற உதாரணங்கள் அக்காலத்துக் கலைகளை
நினைவூட்டுகின்றன.

     ஆண் பெண் ஆகிய இருபாலரும் உடுத்தும் உடையைப் புடவை என்ற
சொல்லால் இவர் காலத்து மக்கள் வழங்கினர் (மதுரைக்-513).

     செல்வம் படைத்த மக்கள் கோவேறு கழுதைமீ்தும், சிவிகையிலும்
சென்றனர் (பொருளதி-212).

     இவர் காலத்தில் வழுதுணங்காயும் (கத்திரிக்காய்) முந்திரிகைப்பழமும்*
தமிழகத்தில் பயிராயின (மதுரை-529). புளியங்காயும் நெல்லிக்காயும்
ஊறுகாயாகப் போட்டுப் பயன்படுத்தப்பட்டன (பெரும்.-57).

     போர்க்காலத்தில் அம்பும் பிறவகைக் கருவியும் பயன்பட்டன.
ஏஎக்கொட்டில், சாலை, துளை, புழை (எழுத்.-277) என்ற உதாரணங்கள்
நினைக்கத்தக்கவை. குதிரையை வீரர்கள் மத்திகையால் (சாட்டை) அடித்து
ஓட்டினர் (எழுத்.-(202): போரில் அம்பு ஏறியும், வேல் குத்தியும் வடுப்பட்ட
வீரர்கள் அவ்வடுக்களை “இஃது ஓர் ஏறு; இஃது ஓர் குத்து” என்று சுட்டிக்
காட்டிப் பெருமையோடு பேசினர் (சொல்-119).

     இவர் காலத்தில் அண்ணாத்து ஏரியும், திட்டாத்துக் குளமும் பலரும்
அறிந்த சிறப்புடன் விளங்கின (எழுத்-226).

     கொற்றங்குடி, கொற்ற மங்கலம், சாத்தங்குடி, சாத்த மங்கலம்,
வேட்டங்குடி, வேட்டமங்கலம் ஆகிய ஊர்கள் சிறப்புடன் இருந்தன
(எழுத்-350).


 

 * திராட்சை; கொடி முந்திரி எனப்பட்டது.