கவிப்பெருமாள் உரை: இது அடிகளின் பொருள் தொடர்பு நோக்கி வரையறுத்துப் பொழிப்புரையாக அமைந்துள்ளது. கீழே விளக்கமும் இலக்கணக் குறிப்பும் தரப்பட்டுள்ளன. ஆற்றொழுக்காய்-இனிய ஓசையுடன் செல்லுகின்றது. இவ்வுரையைப் பின்வரும் வெண்பா பாராட்டுகின்றது: வண்டமிழ்தேர் கீரன் வளமறையாய்ச் சேந்தன்மேல் தண்டமிழ்ஆற் றுப்படையாத் தானுரைத்தான் - ஒண்டமிழின் தெய்வக் கவிப்பெருமாள் தேன்போல் உரைசெய்தான் கைவந்த நூன்முறைமை கண்டு. பரிதி உரை: இது, அருஞ் சொற்களுக்குப் பொருள் கூறும் குறிப்புரையாகும். இப்போது கிடைக்கின்ற உரைகளில் காலத்தால் இது முற்பட்டதாக இருக்கலாம். தேவையான இடங்களில் மிகச்சுருக்கமாய் இலக்கண விளக்கம் தருகின்றது. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் திறனை இவ்வுரை முழுதும் காணலாம். இந்த உரையைப் பின்வரும் வெண்பா பாராட்டுகின்றது: நக்கீரர் தாம்செய்த நன்முருகாற் றுப்படைக்குத் தக்கவுரை சொன்ன தகுதியான் - மிக்குலகில் பன்னூல் அறிந்த பரிதி மறைப்புலவன் தொன்னூல் அறிவால் துணிந்து. உரை வேற்றுமை திருமுருகாற்றுப் படைக்கு ஐந்து பழைய உரைகள் இருப்பதால் அவற்றை ஒப்பிட்டுக் காண்பது அறிவுக்கு விருந்தாய் உள்ளது: ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாய் உள்ளது. மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதோறு ஆடலும் நின்றதன் பண்பே என்ற அடிகளில் உள்ள ‘தலைத் தந்து’ என்ற தொடர் பலவாறு விளக்கப்பட்டுள்ளது. அவற்றைக் காண்போம்: நச்: முதற்கை கொடுத்து. பரிமே: அவ்விடத்து வந்து உரையா: அவர்கள் (மகளிர்) களவறிந்து அவர்கட்கு இருப்பிடம் கொடுத்து. கவி: தானும் ஒரு தலையிலே கை கோத்து. பரிதி: ஒருத்தியை எடுத்து ஒருத்திமேல் போட்டு. |