பக்கம் எண் :

317ஆய்வு

     இவ்வுரைகளுள் உரையாசிரியர் உரை மிகவும் பொருத்தமாய் உள்ளது.
முற்காலத்து வழக்கத்தை அறிந்து எழுதிய விளக்கமாய் உள்ளது. இந்த
அரிய விளக்கம் வேறு உரையாசிரியர்களால் (புறம் - 24, பழைய உரை)
கூறப்படவில்லை.

     பழமுதிர்சோலை (முருகு - 317) என்பது,
          பழம் + உதிர் + சோலை

என்றும்,

          பழம் + முதிர் + சோலை

என்றும் இரு வகையாகப் பிரித்துப் பொருள் கொள்ள இடம் தருகின்றது.
முற்காலத்து உரையாசிரியர்கள் இரு வகையாகவும் பொருள் கொண்டுள்ளனர்:

     நச்: பழம் முற்றின சோலை

     பரிமே: பழம் முதிரும் சோலை

     உரையா: நற்கனிகள் உதிரப்பட்ட சோலை

     கவி: பழங்கள் முற்றப் பெற்ற சோலை

     பரிதி: முதிர்ந்த பழங்கள் பொருந்திய சோலை.

     திருமுருகாற்றுப்படை மிகவும் சிறப்பு வாய்ந்த அழகான உவமையுடன்
தொடங்குகின்றது. இந்த உவமை இலக்கிய உலகத்தின் இமயம்; அணிகளுக்கு
அரசு; கற்பனையின் தலைமையிடம்; புலமையின் விளைநிலம்.
நீலத்தோகையை விரித்து நின்று ஆடும் பச்சை மயிலின்முன் நிற்கும் குமரக்
கடவுளின் தோற்றத்தைப்பாடும் நக்கீரர்,

    உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
    பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு                 (1-2)

என்று உள்ளக்களிப்போடு-பேரின்பக் காட்சியைப் பாடுகின்றார்.
உலகமெல்லாம் உவகை கொள்ளுமாறு இளங்கதிர் கடலில் தோன்றியதுபோல
என்று உவமை கூறுகின்றார். இளஞாயிறு முருகனுக்கும், நீலக்கடல் மயிலுக்கும்
உவமையாகின்றன. இக்காட்சியைப் பலவேறு உரையாசிரியர்கள் பல வகையாய்
விளக்குகின்றனர்.

     நச்: சீவான்மாக்கள் உவப்ப எழுந்து, மகாமேருவை வலமாகத்
திரிதலைச் செய்யும் எல்லாச் சமயத்தாரும் புகழும் ஞாயிற்றைக் கடலிடத்தே
கண்டாற்போல.

     உரையா: உலகத்திலுள்ள பல்லுயிர்களும் மகிழ மேருவை வலமாக,
யாவர்க்கும் நேராகச் சுழலும் தனது ஒளியாற்