கேசவராய முதலியார் ஆகியோர் பழமொழி நானூற்றைப் பழைய உரையுடன் வெளியிட்டனர். சில தமிழறிஞர்கள் தாமே புதிதாக உரை எழுதி வெளியிட்டனர். அவற்றுள் சில: நான்மணிக்கடிகை (1922) - கோ. இராசகோபாலபிள்ளை உரை. இன்னா நாற்பது (1922) - கா. ரா. கோவிந்தராச முதலியார் உரை. களவழி நாற்பது (1877) - சோடாவதானம் சுப்பராய செட்டியார் உரை. இன்னும்பலர், உரை எழுதும் பணியில் ஈடுபட்டுத் தொண்டு செய்துள்ளனர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், எல்லா நூல்களுக்கும் தக்க அறிஞர் பெருமக்களைக் கொண்டு மிகச் சிறந்த முறையில் உரைகளை எழுதி வெளியிட்டுள்ளது. அடுத்த வரும் பகுதிகளில், நாலடியார் திருக்குறள் இரண்டிற்கும் தோன்றியுள்ள உரைகளின் திறன்களைக் காண்போம். 4. நாலடியார் நாலடியார் என்னும் நூலை, ‘நாலடி நானூறு’ என்றும் வழங்குவர். நாலடியார் ஒரு தொகை நூல். இதில் உள்ள வெண்பாக்களைச் சமண முனிவர் பலர் இயற்றியுள்ளனர். நச்சினார்க்கினியர், சீவக சிந்தாமணி உரையில் (1089) நாலடியர் பாடல் ஒன்றே மேற்கோள் காட்டுகின்றார். “பிறரும் இச்சமயத்தார், ‘சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா’ (நாலடி-110) என்பதனாலும் உணர்க” என்று கூறுகின்றார். இதனால் நாலடியார், சமண சமயத்தவர் செய்த நூல் என்பது தெளிவாகின்றது. நச்சினார்க்கினியர், நூலியற்றியவரை ‘இச் சமயத்தார்’ என்று பன்மையாற் சுட்டுகின்றார். ஒருவர் பெயரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. யாப்பருங்கல விருத்தி (செய்யுளியல் - 4), செப்பலோசையை விளக்கும்போது, “இன்னவை பிறவும், நக்கீரர் நாலடி நானூற்று வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை” என்று கூறுகின்றது. இதைக் கொண்டு நாலடியார் நக்கீரரால் எழுதப்பட்டது என்பர்.* இங்கே குறிப்பிடும் ‘நக்கீரர் நாலடி * தமிழ் : அன்றும் இன்றும் - பக்.23 (1967). மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை. |