என்ற வெண்பா, பொருட்பாலை ஏழு இயல்களாகப் பிரித்துக் காட்டுகின்றது. ஆண்பால்ஏழ்; ஆறிரண்டு பெண்பால்; அடுத்தன்பு பூண்பால் இருபால் ஓர்ஆறாக - மாண்பாய காமத்துப் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார் நாமத்தின் வள்ளுவனார் நன்கு (திருவள்-27) என்ற வெண்பா காமத்துப்பாலை மூன்றாகப் பிரிக்கின்றது. இவ்வாறே தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தில் கிடைத்த ‘திருக்குறள் அதிகார அடைவு’ என்றும் பழஞ்செய்யுள் ஒன்றும் பால்தோறும் இயல்களைப் பிரிந்துள்ளது. இனி, மற்ற உரையாசிரியர்கள் இயல்களை எவ்வெவ்வாறு பிரிந்துள்ளனர் எனக் காண்போம். அறத்துப்பால் பரிமேலழகர், அறத்துப்பாலின் முதல் நான்கு அதிகாரங்களைப் பாயிரம் என்று கொண்டார் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. உரைப்பாயிரத்தில் ‘அறம், இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது’ என்று கூறி, எடுத்துக் கொண்ட இலக்கியம் இனிது முடித்தற் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார் என்ற குறிப்போடு நூலுள் நுழைகின்றார். கடவுள் வாழ்த்திற்கு அடுத்த மூன்று அதிகாரங்களும் அறத்துப் பாலின் தோற்றுவாயே என்பது அவர் கருத்தாதல் வேண்டும். இல்வாழ்க்கை முதல் (5) புகழ் ஈறாக (24) உள்ள இருபது அதிகாரங்கள் இல்லறம் பற்றியவை என்ற கருத்து அவர்க்கு உடன்பாடே. துறவற இயலை (25-37) அவர் விரதம், ஞானம் என இரண்டாகப் பகுத்துக் கொண்டு விளக்கம் எழுதுகின்றார். அருளுடைமை முதல் கொல்லாமை ஈறாக (25-33) உள்ளனவற்றை விரதம் என்றும், நிலையாமை முதல் அவாவறுத்தல் வரை (34-37) உள்ளனவற்றை ஞானம் என்றும் பகுத்துக் கொள்ளுகின்றார். ஊழ்இயலைத் (38) தனி இயலாகவே கருதுகின்றார். மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய உரையாசிரியர்கள் திருவள்ளுவமாலை கூறுவதுபோல அறத்துப் பாலைப் பாயிரம் (1-4), இல்லறவியல் (5-24), துறவறவியல் (25-37), ஊழியல் (38) என நான்காவே பிரிக்கின்றனர். பொருட்பால் பரிமேலழகர் பொருட்பாலை அரசியல் (1-25), அங்கவியல் (26-57), ஒழிபியல் (58-70) என மூன்றாகப் பகுத்து, உரை எழுது |