இத்தகைய பொருந்தாவுரைகளை 9, 91, 165, 394, 432, 449, 576, 599, 714, 840, 890, 1105 ஆகிய குறட்பாக்களின் உரைகளிலும் காணலாம். சிறப்பான உரைப்பகுதி பரிதியார் உரையில் கற்போர் மகிழும் வகையில் அமைந்துள்ள உரைப்பகுதிகள் சில்உள்ளன. அவை கீழே தரப்படுகின்றன. எழுபிறப்பு (62) - தேவர், மனிதர், மிருகம், ஊர்வன, நீர்வாழ்வன, பட்சி, தாவரம், அழுக்காறு உடையான் (135) - அழுக்கு மனம் உடையார். ஆக்கம் (177) - மரபு வழிச் செல்வம். பயன் மரம் (216) - பயன்பட மாமரம் பலாமரம் பனை மரம். கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை (290) - கபடியார்க்கு அற்பாயுசுவாய்ச் சுவர்க்கமில்லை. துறந்தார் (310) - தொண்ணூற்றாறு தத்துவத்தையும் உடலோட இருக்கையிலே புளியம் பழமும் ஓடும்போலே துறந்தார். நாள் (334)-ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்று தோன்றும் நாள். நாச்சென்று (335) என்னும் குறளுக்கு “நாக்குக் குழறி விக்கலும் வருமுன்னே அறம் செய்வான்; பின்னை வசமல்ல பொன்னும் பொரி விளங்காயாம்” என்று பொருள் உரைக்கின்றார். “பொன்னும் பொரி விளங்காயாம்” என்பது இவர் காலத்தில் வழங்கிய நாட்டுக் கதையாகவோ, பழமொழியாகவோ இருக்கலாம். சீவக சிந்தாமணியில் வரும், “கையால் பொதித்துணையே காட்ட” (1553) என்ற பாடல் கூறும் கதை இங்கே கருதத்தக்கதாகும். குடிபுறம் காத்து (549)-”குடியை அறுவகைப் பயம் தீ்ர்த்து” என்கின்றார். இக்கருத்துப் பெரியபுராணத்தில் சேக்கிழார் மன்னனைப் பற்றிக் கூறும் கருத்துடன் ஒத்துள்ளது.* கல்லார்ப் பிணிக்கும் (570) என்ற குறளுக்கு “பூமிக்கு எட்டுமலையும் எழுகடலும் பாரமல்ல; கொடுங்கோல் மன்னவன் பாரம்” என்று உரை எழுதுகின்றார். இணர் ஊழ்த்தும் நாறாமலர் (650) முருக்கம்பூ. * ‘மாநிலங்காவலாவான்’ - திருநகரச் சிறப்பு-36. |