என்ற வெண்பா காணப்படுகின்றது. இவ்வெண்பாவால் பரிப்பெருமாள் மொழியியல், காமநூல் என்ற இரண்டு நூல்களை இயற்றினார் என அறியலாம். தென்செழுவை என்பது இவரது ஊர் என உணரலாம். தென்செழுவை, பாண்டி மண்டலத்துச் சேது நாட்டில் உள்ளது. இவரைப் பற்றிய சில பாடல்கள் பெருந்தொகையில் உள்ளன. உரைச் சிறப்புப்பாயிரம் பின்வருமாறு அமைந்துள்ளது. மாயிரு ஞாலத்து மன்பொருள் விளக்கும் ஆயிரம் கதிரும் ஆழ்கடல் மறைந்தபின் விரிகதிர் மதியும் விளங்காக் காலத்து எரிதலைக் கொளீஇய சில்திரி விளக்கின் அரியவும் பெரியவும் அறிந்தோர் போல வசையில் வள்ளுவன் வாய்மொழிப் பொருளை இசைபட நுவல்வோர் இறந்த பின்னர் நன்மதி யுடையோர் நாடார் ஆதலின் என்மதி அளவின் யான்அறிந்து உரைத்த மழலைக் கிளவியை மதியோர் ஆராய்ந்து இகழ்தல் இன்றியே யாவையும் இயைத்துத் திருத்தி உரைத்தல் வேண்டும் அருத்தம் பயில்வோர் அருங்கடன் எனவே - (பெருந் - 1539) என்ற உரைச்சிறப்புப் பாயிரத்தில் வரும், ‘வள்ளுவன் வாய்மொழிப் பொருளை இசைபட நுவல்வோர் இறந்த பின்னர், யான் அறிந்து உரைத்த மழலைக்கிளவி’ என்ற அடிகள் பரிப்பெருமாளுக்கு முன்னரே வேறு சிலர் திருக்குறளுக்கு உரை இயற்றினர் என்பதை உணர்த்தும். இவரது புதிய உரையை அக்காலதவர் போற்றாது புறக்கணித்ததால் பின்வரும் செய்யுளை இவர் இயற்றியிருக்கக்கூடும். புதியது தீது பழையது நன்றுஎன்றல் பூமியுள்ளோர் விதியது பொருளென என்னன்மின் நல்லோர் விருப்பமுண்டேல் புதியது நன்று பழையது தன்னினும் பூமடந்தை புதியதின் மேவில் பருமுத்தோடு ஆடையைப் பார்மின்களே! (பெருந் - 1540) பரிப்பெருமாள், தமது உரை திருக்குறளின் உட்பொருளை நன்கு விளக்குவது என்றும்; முப்பாலின் கருத்தறியாது |